அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்தார் பிரதமர் மோடி!
வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்பை இன்று சந்தித்து பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.
போர்ச்சுக்கல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள டெல்லியில் இருந்து விமானம் மூலம் கடந்த 24ம் தேதி புறப்பட்டார்.

பிரதமரின் இந்த சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக போர்ச்சுகல் நாட்டுக்குச் சென்றார். அங்கு பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் அண்டோனியோ கோஸ்டா விருந்தளித்தார். இதனைத் தொடர்ந்து இருநாட்டு உறவுகள் குறித்தும் வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது
இதனைத்தொடர்ந்து மோடி அமெரிக்காவிற்கு சென்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வாஷிங்டனில் தொழில் அதிபர்களை மோடி சந்தித்து பேசினார்.
இந்நிலையில் வெள்ளை மாளிகைக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் வெள்ளை மாளிகை அமைச்சரவை கூட்ட அரங்கில் இருவரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிபர் டிரம்பை மோடி சந்திப்பது இதுவே முதல்முறை ஆகும்.
இந்த சந்திப்பின்போது ராணுவ கூட்டுறவு, சர்வதேச அளவிலான உறவு, வர்த்தகம், எரிசக்தி துறை தொடர்பான விஷயங்கள் பற்றி ஆலோசனை நடத்தப்பட உள்ளது. பின்னர் இருவரும் கூட்டாக அறிக்கையை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர். அதிபர் டிரம்ப் மோடிக்கு இரவு விருந்து அளிக்கிறார். டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின், வெளிநாட்டு தலைவர் ஒருவருக்கு வெள்ளை மாளிகையில் விருந்து அளிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications