'போர்க்குற்றவாளி' மைத்ரிபால சிறிசேனவே திரும்பிப் போ- லண்டனில் ஈழத் தமிழர்கள் போராட்டம்
லண்டன்: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் இங்கிலாந்து வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஈழத் தமிழர்கள் மாபெரும் கண்டன போராட்டம் நடத்தினர்.
இலங்கையின் தற்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேன, 2009-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருந்தவர்.
இறுதி யுத்தத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போர்க்குற்றத்துக்கு மைத்ரிபால சிறிசேனவும் உடந்தை என்பது குற்றச்சாட்டு. இத்தகைய போர்க்குற்றவாளியான மைத்ரிபால சிறிசேன லண்டனில் நடைபெறும் ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்க இங்கிலாந்துக்கு வருகை தரக்கூடாது என ஈழத் தமிழர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த எதிர்ப்பை மீறி இங்கிலாந்துக்கு வருகை தந்த மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டன் நகரில் நேற்று பிரமாண்ட கண்டனப் போராட்டத்தை ஈழத் தமிழர்கள் நடத்தினர்.
இப்போராட்டத்தில் பங்கேற்றோர் போர்க்குற்றவாளி மைத்ரிபாலவுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.
கடந்த ஆண்டும் இங்கிலாந்து சென்ற மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக ஈழத் தமிழர்கள் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.