சவுதி, கத்தார், எமிரேட்ஸ், பஹ்ரைன் மக்கள் லெபனான் நாட்டிற்கு செல்லத் தடை
ரியாத்: சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாடுகள் தங்கள் குடிமக்கள் லெபனானுக்குப் பயணம் மேற்கொள்ளத் தடை விதித்துள்ளன. இதேபோல், லெபனாலில் உள்ள தங்களது குடிமக்களையும் உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளன.
சிரியாவில் உள்ள அஸ்ஸாத் அரசுக்கு ஹெஸ்புல்லா அமைப்பு ஆதரவு அளித்து வருகிறது. இந்த ஹெஸ்புல்லா போராளிகள் இயக்கமானது, ஈரான் ஆதரவு ஷியா பிரிவு போராளிகள் இயக்கமாகும். ஹெஸ்புல்லா அமைப்பின் ஆதரவுக்கு லெபனானும் ஆதரவாக உள்ளது.
இது சவுதி அரேபியாவுக்குப் பிடிக்கவில்லை. மேலும் சிரியா மீது தாக்குதலில் ஈடுபடவும் சவுதி அரேபியா திட்டமிட்டு வருகிறது. இதற்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. லெபனானும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் லெபனான் சவுதி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து லெபனானுக்கு அளிக்கவிருந்த பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் உதவித்தொகையை சவுதி நிறுத்தி விட்டது.
மேலும் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள தூதரகப் பணியாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், சவுதி அரேபிய குடிமக்கள் லெபனான் நாட்டுக்குப் பயணம் செய்தற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அதேபோல், லெபனானில் இருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களையும் உடனடியாக அங்கிருந்து வெளியேறவும் சவுதி அறிவுறுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன் நாடுகளும் தங்கள் நாட்டு குடிமக்கள் லெபனானுக்குப் பயணம் செய்வதற்குத் தடை விதித்துள்ளன.
ஏற்கனவே ஏமனில், ஈரான் ஆதரவு போராளிகள் மீது சவுதிப் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் சவுதிக்குப் பெரும் இழப்பே ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.