100 டிரோன்கள், 100 ஏவுகணைகள்.. புதின் போட்ட உத்தரவு! ரஷ்ய தாக்குதலால் கையை பிசையும் உக்ரைன் அதிபர்
கீவ்: ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் சில காலமாகச் சற்றே ஓய்ந்திருந்த நிலையில், திடீரென இன்றைய தினம் உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்களை நடத்தியுள்ளது. எனர்ஜி உட்கட்டமைப்பைக் குறிவைத்து அதிநவீன தொழில்நுட்பம் மூலம் இந்தத் தாக்குதலை நடத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மறுபுறம் மேற்குலக நாடுகள் தங்களைக் காப்பாற்ற உதவ வேண்டும் என்று உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் கடந்த பல மாதங்களாகத் தொடர்ந்து நடந்து வருகிறது. இடையில் சில காலம் இந்த போர் சற்றே ஓய்ந்திருந்தது. இரு தரப்பும் பெரியளவில் தாக்குதல் நடத்தாமல் இருந்தன.

ரஷ்யா: இதற்கிடையே உக்ரைன் மீதான தாக்குதலை திடீரென மீண்டும் ரஷ்யா தீவிரமாக்கியுள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உக்ரைன் நாட்டில் உள்ள முக்கியமான உள்கட்டமைப்புகளைத் தாக்கியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் எனர்ஜி உள்கட்டமைப்பைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்யா ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், உக்ரைன் நாட்டில் உள்ள அணைகள் மற்றும் மின்சார உற்பத்தி நிலையங்களைக் குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலக்குகள் மீது துல்லியமாகத் தாக்குதல் நடத்த அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்தியதை ரஷ்யா உறுதி செய்துள்ளது. சுமார் 10க்கும் மேற்பட்ட பகுதிகளின் மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
தாக்குதல்: உக்ரைன் தரப்பும் இந்தத் தாக்குதலை உறுதி செய்துள்ளது. ட்ரோன்கள், கப்பல் ஏவுகணைகள் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்கள் நடந்ததாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். வரும் காலங்களில் இந்தத் தாக்குதல் அதிகரிக்கும் என்று அஞ்சப்படும் நிலையில், ரஷ்யத் தாக்குதல்களை வீழ்த்த உதவுமாறு ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.
உக்ரைன் அதிபர்: இது தொடர்பாக அவர் கூறுகையில், "ஐரோப்பிய நாடுகளுக்கு அருகிலுள்ள பல பகுதிகள் உட்பட, 100க்கும் மேற்பட்ட இடங்களில் ஏவுகணைகள் மற்றும் டிரோன் தாக்குதல் நடந்தது. அண்டை ஐரோப்பிய நாடுகள் எங்களுடன் இணைந்து செயல்பட்டால் அப்பாவி உயிர்களைக் காப்பாற்ற முடியும்.
மத்திய கிழக்கில் (இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவுவதைக் குறிப்பிடுகிறார்) இந்த ஒற்றுமை இருக்கிறது. அப்போது ஐரோப்பாவிலும் அதே ஒற்றுமை இருக்க வேண்டும். எல்லா இடங்களிலும் உள்ள உயிரின் மதிப்பு ஒன்று தான. ரஷ்யா எல்லைக்குள் நீண்ட தூரம் சென்று தாக்குதல் நடத்த மேற்குலக நாடுகள் எங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அந்த கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நட்பு நாடுகள் ரஷ்யாவின் இந்த அத்துமீறலைத் தடுக்க உதவ வேண்டும்" என்றார்.
மிக மோசமான தாக்குதல்: உக்ரைன் நாட்டில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷ்யா சரமாரியான ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால் அங்கே மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 10 இடங்களைக் குறிவைத்து 100 ஏவுகணைகள், 100 டிரோன்கள் மூலம் ரஷ்யா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த மோசமான தாக்குதலில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ள நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. முக்கிய உட்கட்டமைப்புகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications