தொடங்கியது போர்! உள்ளே சென்று தாக்குங்கள்.. உக்ரைன் மீது போர் தொடுக்க ஆணையிட்டார் ரஷ்ய அதிபர் புடின்
மாஸ்கோ; உக்ரைன் மீது போர் தொடுக்கும்படி ரஷ்ய நாட்டு அதிபர் புடின் இன்று காலை உத்தரவிட்டார். ரஷ்ய நேரப்படி அதிகாலை 6 மணிக்கு அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Recommended Video
ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த பல வருடங்களாக மோதல் அதிகரித்துக்கொண்டே வந்தது. அதிலும் கடந்த 25 வருடங்களில் மோதல் புதிய விஸ்வரூபம் எடுத்தது. இந்த நிலையில்தான் தற்போது ரஷ்யா - உக்ரைன்மோதல் என்பது போராக உருவெடுத்து உள்ளது.
இன்று காலை உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் போர் தொடுக்க ஆணையிட்டார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். ஏற்கனவே அந்நாட்டு பாராளுமன்றம் வெளிநாட்டு மண்ணில் ஆயுத தாக்குதல்கள் நடத்த ரஷ்ய ராணுவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் அதிகாரபூர்வ அனுமதி அளித்தது.

அனுமதி
இதையடுத்து இன்று உக்ரைன் உள்ளே சென்று ரஷ்யா தாக்குதல் நடத்த உள்ளது. கிழக்கு உக்ரைனுக்குள் புகுந்து ராணுவ நடவடிக்கைகளை எடுக்க புடின் உத்தரவு பிறப்பித்துள்ளார். கிழக்கு உக்ரைன் பகுதியில் ஏற்கனவே அரசுக்கு எதிரான புரட்சி படைகள் உள்ளது. இந்த படைகளுக்கு பல வருடங்களாக ரஷ்யா ராணுவ உதவிகளை செய்து வருகிறது. உக்ரைன் அமெரிக்காவுடன் நெருக்கம் ஆனதில் இருந்தே ரஷ்யா இந்த படைகளுக்கு உதவி செய்து வருகிறது.

புரட்சி படைகளுக்கு உதவி
உக்ரைன் அரசுக்கு எதிராக இந்த புரட்சி படைகளை வளர்த்துவிட்டு அங்கு தங்களுக்கு ஆதரவான ஆட்சியை கொண்டு வர ரஷ்யா முயன்றது. அது முடியாத நிலையில்தான் ரஷ்யா தற்போது போரில் இறங்கி உள்ளது. ரஷ்யா ஏற்கனவே கடந்த் 4 நாட்களுக்கு முன் இந்த படைகளுக்கு ஆயுதங்கள், துப்பாக்கிகள், குண்டுகள், ராக்கெட்டுகளை கொடுத்தது குறிப்பிடத்தக்கது. ரஷ்ய ராணுவத்துடன் இணைந்து இந்த புரட்சி படைகளும் உக்ரைனில் போர் தொடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

எமர்ஜென்சி
ரஷ்யா போர் தொடுக்க போவது உக்ரைனுக்கும், நேட்டோ நாடுகளுக்கும் முன்பே அறிந்த விஷயம்தான். புலி வருகிறது கதையாக கடந்த ஒரு மாதமாக ரஷ்யா இப்போது போர் தொடுக்கும், அப்போது போர் தொடுக்கும் என்று கூறப்பட்டது. நேற்று இரவே, ரஷ்யா இன்று காலை போர் தொடுக்கும் என்பது உறுதியானது. இதனால் உக்ரைனில் இன்று காலை எமர்ஜன்சி அறிவிக்கப்பட்டது. அதோடு இன்று காலை அங்கு வான்வெளி போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மூடப்பட்ட வான்வெளி
ரஷ்யா உக்ரைனில் வான்வெளி தாக்குதல், நேரடி ராணுவ தாக்குதல் இரண்டையும் நடத்த உள்ளது. இதனால் அங்கு பெரிய சேதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இன்று அதிகாலை தாக்குதல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்கும்படி ரஷ்ய நாட்டு அதிபர் புடின் இன்று காலை உத்தரவிட்டார். ரஷ்ய நேரப்படி அதிகாலை 6 மணிக்கு அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். நேற்றுதான் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் இந்த போர் குறித்து அவசர மீட்டிங் நடத்தியது.

உத்தரவு பறந்தது
ரஷ்யாவின் இந்த முடிவால் அமெரிக்கா, நேட்டோ நாடுகள், மற்ற ஐரோப்பா நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக போரில் குதிக்கும் வாய்ப்புகள் உள்ளன. சரி இந்த போருக்கு என்ன காரணம் என்று பார்க்கலாம். ஒரு காலத்தில் சோவியத் யூனியனில் ரஷ்யா - உக்ரைன் ஒன்றாக இருந்தது. ஆனால் சோவியத் உடைந்த பின் உக்ரைன் தனி நாடு ஆனது. சமீப காலமாக அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுடன் உக்ரைன் நெருக்கம் ஆகி வருகிறது. இதை ரஷ்யா விரும்பவில்லை.

நேட்டோ படைகள்
முக்கியமாக மற்ற முன்னாள் சோவியத் நாடுகள் பல நேட்டோ படையுடன் இணைந்தது போல உக்ரைன் நேட்டோ படையுடன் இணையும் திட்டத்தில் இருந்தது. இதை ரஷ்யா விரும்பவில்லை. இதன் காரணமாக உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா திட்டமிடுகிறது. ஏற்கனவே உக்ரைனின் ஒரு பகுதியான க்ரீமியாவை ரஷ்யா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டது. இந்த நிலையில் முழு உக்ரைனையும் ரஷ்யா கட்டுக்குள் கொண்டு வர முயன்று கொண்டு இருக்கிறது. உக்ரைன் நேட்டோ கட்டுப்பாட்டில் சென்றால் அது ரஷ்யாவிற்கு ஆபத்து என்பதால் ரஷ்யா முந்திக்கொண்டு உக்ரைனை கைப்பற்ற பார்க்கிறது.












Click it and Unblock the Notifications