இந்தியா எவ்வளவு பெரிய நாடு.. சீண்டி விடுவீர்களா.. அவ்வளவுதான்.. டிரம்பை புரட்டி எடுத்த ரஷ்ய புடின்
மாஸ்கோ: இந்தியாவை கடுமையான வார்த்தைகள் மூலம் அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சனம் செய்வதை ரஷ்ய அதிபர் புடின் கண்டித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சர்வதேச வர்த்தக உறவுகளில் பரஸ்பர மரியாதைக்குரிய மொழி பயன்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். இந்தியாவின் மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகள், ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் தொடர்பான கூடுதல் வரிகள் மற்றும் சீன இறக்குமதி வரிகளை மறைமுகமாக விமர்சித்தார்.

இந்தியாவிற்கு ஆதரவாக களமிறங்கிய டிரம்ப்
சீனாவிற்கு நான்கு நாள் பயணமாக சென்றிருந்த ரஷ்ய அதிபர் புதின், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது, "இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு எதிராக கடுமையான சுங்கவரிகளை விதிப்பதன் மூலம், அமெரிக்கா தனது ஆதிக்கப் போக்கை வெளிப்படுத்துகிறது" என்று அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.
"இந்தியா 150 கோடி மக்கள் தொகையையும், சீனாவும் வலிமையான பொருளாதாரத்தையும் கொண்ட நாடுகள். அவற்றுக்கென தனிப்பட்ட உள்நாட்டு அரசியல் வழிமுறைகளும், சட்டங்களும் உள்ளன" என்று புதின் தெரிவித்தார். இந்த நாடுகள், காலனித்துவ ஆட்சியில் இருந்தபோது ஏற்பட்ட சவால்களையும், இறையாண்மைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களையும் கடந்து வந்தவை என்பதையும் அவர் நினைவுபடுத்தினார்.
இந்தியா பெரிய நாடு
மேலும், "யாரேனும் ஒரு நாட்டை, 'உங்களை நாங்கள் தண்டிப்போம்' என்று கூறினால், அந்தப் பெரிய நாடுகளின் தலைவர்கள் எவ்வாறு செயல்படுவார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அவர்களில் ஒருவர் பலவீனத்தை வெளிப்படுத்தினால், அவர்களின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரும்" என்று புதின் கூறினார்.
காலனித்துவ காலம் முடிவுக்கு வந்ததால், இனிமேல் பங்காளிகளுடன் பேசும்போது அச்சுறுத்தும் சொற்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் புதின் வலியுறுத்தினார். இறுதியில் நிலைமை சீரடைந்து, அரசியல் உரையாடல்கள் மேம்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அரசியல் வாழ்க்கை முடிவிற்கு வரும்
உலகம் ஒற்றை துருவமாக இருக்கக் கூடாது என்றும், பல துருவ உலக ஒழுங்குமுறை உருவாக வேண்டும் என்றும் ரஷ்ய அதிபர் கூறினார். இதில் எந்த நாடும் ஆதிக்கம் செலுத்தாமல், அனைத்து நாடுகளுக்கும் சம உரிமை இருக்க வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாக இருந்தது. தனியாக ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் இருக்கக் கூடாது. BRICS அல்லது SCO கூட்டமைப்புகளில் யாரும் ஆதிக்கம் பற்றி பேசுவதில்லை. இந்த பல துருவ உலகில் அனைவருக்கும் சம உரிமைகள் உள்ளன" என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தியா, சீனா போன்ற பொருளாதார ரீதியாக வலிமையான நாடுகளைக் குறிப்பிட்ட புதின், சர்வதேச சட்டத்தின்படி, அனைவருக்கும் சம உரிமை இருக்க வேண்டும். நமது நாடும் உலகின் முதல் நான்கு பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாகும்" என்றார்.
நல்ல உறவை பேண முடியாது
ஒரு நாட்டை இகழ்ந்து பேசிவிட்டு அந்த நாட்டுடன் நல்ல உறவை பேண முடியும் என்று நினைக்க கூடாது. எந்த நாடும் அரசியல் அல்லது உலகளாவிய பாதுகாப்பில் ஆதிக்கம் செலுத்தக்கூடாது. அனைவருக்கும் சம உரிமை இருக்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் வலியுறுத்தினார். உக்ரைன் மோதல் காரணமாக மேற்குலக நாடுகள் ரஷ்யா மீது விதித்த தடைகள் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த சுங்கவரிகள் குறித்து அவரது கருத்துக்கள் நேரடியான வலிமையான விமர்சனமாக பார்க்கப்படுகின்றன.
டிரம்ப் நிர்வாகம் இந்திய இறக்குமதிகள் மீது 25% சுங்கவரியையும், ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் காரணமாக மேலும் 25% கூடுதல் வரியையும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications