அணு ஆயுத பேரழிவுக்கு.. உலகம் சில மில்லி மீட்டர் தொலைவில்தான் இருக்கிறது! டிரம்புக்கு ரஷ்யா வார்னிங்
மாஸ்கோ: ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், "அணு ஆயுத பேரழிவுக்கு உலகம் சில 'மில்லி மீட்டர்கள்' தொலைவில்தான் இருக்கிறது" என்று ரஷ்யா எச்சரித்திருக்கிறது.
இன்டர்ஃபாக்ஸ் செய்தி ஊடகத்திற்கு நேற்று ரஷ்யாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் பேட்டியளித்திருந்தார். அந்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கு வார்னிங்
அதாவது, "ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் அமெரிக்கா நேரடியாக இஸ்ரேலுக்கு ராணுவ உதவி செய்தால், அது மத்திய கிழக்கு பகுதியில் நிலைமையை மேலும் மோசமாக்கும். அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ராணுவ உதவியை வழங்குவதை ரஷ்யா கடுமையாக எச்சரிக்கிறது. இப்போது நடக்கும் மோதல், அணுசக்தி பேரழிவின் விளிம்பில் உலகத்தைக் கொண்டு வந்துள்ளது. பேரழிவுக்கு வெறும் சில மில்லி மீட்டர் தொலைவில்தான் உலகம் இருக்கிறது. மோதலில் ஈடுபட்டிருக்கும் இஸ்ரேல் மற்றும் ஈரானுடன் ரஷ்யா தொடர்ந்து பேசி வருகிறது" என்று கூறியுள்ளார்.
கொக்கரித்த டிரம்ப்
முன்னதாக ஈரான் குறித்து பேசியிருந்த டிரம்ப், "உங்கள் தலைவர் காமெனி எங்கு இருக்கிறார் என்று எங்களுக்கு தெரியும். கவலைப்படாதீர்கள் அவரை நாங்கள் கொல்லப்போவதில்லை. ஆனால் உடனடியாக போரை நீங்கள் நிறுத்த வேண்டும். எந்தவித நிபந்தனையும் இன்றி நீங்கள் சரணடைய வேண்டும்" என்று கொக்கரித்திருந்தார்.
பதிலுக்கு ஈரான் தரப்பிலிருந்து கடுமையான எதிர்வினை வந்திருந்தது. "ஈரானை யாராலும் சரணடைய செய்ய முடியாது. ஒருவேளை அமெரிக்கா இந்த போரில் இணைந்தால், சரி செய்ய முடியாத சேதம் ஏற்படும்" என்று ஈரான் எச்சரித்திருந்தது.
ரஷ்யாவின் தலையீடு
இப்படி இருக்கையில்தான் ரஷ்யாவின் கருத்து வெளியாகியுள்ளது. தொடக்கத்திலிருந்து ரஷ்யா, ஈரான் பக்கம்தான். போதாத குறைக்கு பிரிக்ஸ் அமைப்பிலும் ஈரான் இணைந்திருப்பதால், ஒருவேளை அமெரிக்கா நேரடியாக தாக்குதலில் ஈடுபட்டால், ரஷ்யாவும் நேரடியாக தலையீடு செய்யும். அது மூன்றாம் உலகப் போருக்கு வழி வகுக்கும். இதைத்தான் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர், மேலோட்டமாக எச்சரித்திருக்கிறார். இருப்பினும், இந்த போரில் ரஷ்யா இதுவரை எந்த தலையீடும் செய்யவில்லை.
அதேபோல ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், அந்நாட்டு அரசு செய்தி ஊடகமான 'டாஸ்'-க்கு அளித்த பேட்டியில், "அமெரிக்கா இந்த போரில் நேரடியாக தலையிட்டால், ஒரு லூப்-ஐ ஏற்படுத்தும். இது பயங்கரமானதாக இருக்கும்" என்று எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு உதவ வேண்டாம்
மேலும், "இஸ்ரேலின் தாக்குதல்களில் சந்தேகம் இருக்கிறது. அத நியாமற்றதாக இருக்கிறது. இஸ்ரேலுக்கு இராணுவ உதவி வழங்க வேண்டாம் என்று அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுக்கிறோம்" என்று ரஷ்ய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் கூறியிருந்தார். ஆக ரஷ்யாவின் பார்வை முழுவதும் இஸ்ரேல் மீதும், அமெரிக்கா மீதும் குவிந்திருக்கிறது. ஒரு சிறிய தவறான நகர்வு கூட பேரழிவை ஏற்படுத்திவிடும் என்று சொல்லப்படுவதால், அமெரிக்காவும், இஸ்ரேலும் வெறும் கையை பிசைந்துக்கொண்டிருக்கின்றன.
ரஷ்யாவின் ராணுவ தளம்
மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கு ராணுவ தளம் இருப்பதை போல ரஷ்யாவுக்கும் தளம் இருக்கிறது. சிரியாவின் லதாகியா மாகாணத்தில் க்மீமிம் விமானப்படைத் தளத்தை ரஷ்யா இயக்கி வருகிறது. இங்கு Su-34, Su-35, MiG-31K அதிநவீன போர் விமானங்களை ரஷ்யா வைத்திருக்கிறது. இது மிகப்பெரிய விமானப்படை தளமாகும். இதே சிரியாவில் டார்ட்டஸ் கடற்படைத் தளத்தையும் ரஷ்யா இயக்கி வருகிறது. மத்தியதரைக் கடலில் ரஷ்யா வைத்திருக்கும் ஒரே கடற்படைத்ததளம் இதுதான்.
ஒருவேளை இஸ்ரேலுக்கு சப்போர்ட்டாக அமெரிக்கா களமிறங்கினால் இந்த இடங்களிலிருந்து ரஷ்யாவும் நேரடியான தாக்குதலில் ஈடுபட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications