செர்னோபில் அணு ஆலையைக் கைப்பற்றிய ரஷ்யா.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பரபர குற்றச்சாட்டு! அடுத்து என்ன
மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கி உள்ள நிலையில், ரஷ்ய ராணுவம் மீது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
உக்ரைன் எல்லையில் கடந்த சில வாரங்களாகவே ராணுவத்தைத் தொடர்ந்து குவித்து வந்த ரஷ்யா, இப்போது நேரடியாகப் போரைத் தொடங்கியுள்ளது. முழு வீச்சில் ராணுவ நடவடிக்கையை ரஷ்யா தொடங்கியுள்ளது.
இதற்கு உலகின் பல்வேறு நாடுகளும் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்கனவே ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க தொடங்கி உள்ளன.

ரஷ்யா போர்
இன்று காலை தான் உக்ரைன் மீது முழு வீச்சில் தாக்குதல் தொடங்கப்படும் என ரஷ்யா அதிபர் புதின் அறிவித்திருந்தார். உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை தான் இது எனத் தெரிவித்துள்ள அதிபர் புதின், உக்ரைன் விவகாரத்தில் யாராவது தலையிட்டால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே உக்ரைன் தலைநகரான கீவ் நகரில் ரஷ்யா ராணுவம் நுழைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பரபர குற்றச்சாட்டு
முதலில் வான்வழித் தாக்குதலைத் தொடங்கிய ரஷ்யா, அதன் பின்னர் தரைவழியான தாக்குதலையும் தொடங்கியது. உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கியதில் இருந்தே அங்கு என்ன நடந்து வருகிறது என்பது குறித்த தகவல்களை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து வருகிறார். இதனிடையே ரஷ்ய ஆக்கிரமிப்புப் படைகள் செர்னோபில் பகுதியில் உள்ள அணு ஆலையைக் கைப்பற்ற முயல்வதாக ஜெலன்ஸ்கி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

அதிபர் ஜெலன்ஸ்கி
இது தொடர்பாக அதிபர் ஜெலன்ஸ்கி தனது ட்விட்டரில், "ரஷ்ய படைகள் செர்னோபில் பகுதியில் உள்ள அணு ஆலையை மீண்டும் கைப்பற்ற முயல்கின்றன. 1986இல் நிகழ்ந்ததை போல ஒரு பேரழிவு நடக்காமல் இருக்க நமது வீரர்களை தங்கள் உயிரைக் கொடுத்துப் போராடுகிறார்கள். இது தொடர்பா சுவீடன் பிரதமரிடம் தெரிவித்துள்ளேன். இது ஒட்டுமொத்த ஐரோப்பாவிற்கும் எதிரான போர்ப் பிரகடனம்" என்று தெரிவித்துள்ளார். செர்னோபில் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சண்டை நடைபெற்று வருவதைச் சர்வதேச செய்தி நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.

செர்னோபில் அணுஉலை
இந்த செர்னோபில் அணுமின் நிலையம் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலையில் அமைந்துள்ளது. கடந்த 1986ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி இரவு செர்னோபில் அணுமின் நிலையத்தின் 4ஆவது அணுஉலை வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், அங்கிருந்து வெளியான கதிரியக்கத்தால் உக்ரைன் மக்களுக்கு மோசமான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications