நம்பர் ஒன் சானியாவால் பாகிஸ்தானுக்கும் பெருமையாம்: சொல்கிறார் சோயப் மாலிக்
கராச்சி: டென்னிஸ் இரட்டையர் பிரிவு தரவரிசையில் உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளதன் மூலம் சானியா மிர்சா பாகிஸ்தானுக்கும் பெருமை சேர்த்துள்ளதாக அவரின் கணவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயப் மாலிக் தெரிவித்துள்ளார்.
டென்னிஸ் போட்டிகளில் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா கவனம் செலுத்தி வருகிறார். அவர் அண்மை காலமாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மார்டினா ஹிங்கிஸுடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார். அந்த ஜோடி அடுத்தடுத்து 3 கோப்பைகளை வென்றுள்ளது. இதன் மூலம் சானியா-ஹிங்கிஸ் ஜோடி டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில் உலக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இது குறித்து சானியாவின் காதல் கணவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயப் மாலிக் கூறுகையில்,
சானியாவின் சாதனையை நினைத்து நான் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன். அவர் என் மனைவி என்பதால் இதனால் பாகிஸ்தானுக்கு பெருமை. அவர் இந்தியா சார்பில் விளையாடி வருகிறார். சானியாவின் வெற்றி இளம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். இது இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள அனைத்து டென்னிஸ் வீரர்கள், ரசிகர்களின் வெற்றி.
நான் சானியாவை திருமணம் செய்வதற்கு முன்பில் இருந்தே எனக்கு டென்னிஸ் பிடிக்கும். சானியா விளையாடும் அனைத்து போட்டிகளையும் தவறாமல் பார்த்துவிடுவேன் என்றார்.












Click it and Unblock the Notifications