சவுதி அரேபிய வரலாற்றில் முதன்முறையாக பத்திரிக்கை ஆசிரியராக பெண் நியமனம்

சவுதி அரேபியாவில் மதக்கட்டுப்பாடு என்ற பெயரில் பெண்கள் தனியாக கடைவீதிக்கு செல்ல கூடாது, தலை முதல் கால் வரை மறைக்கும் ஆடைகளை அணிந்து, ஆண் துணையுடன் தான் வெளியே செல்ல வேண்டும், வாகனங்களை ஓட்டும் உரிமம் மறுப்பு எனப் பல்வேறு அடக்குமுறை சட்டங்கள் அமலில் உள்ளன.
இந்நிலையில், சவுதியின் கடற்கரை நகரமான ஜெட்டாவில் இருந்து வெளிவரும் பிரபல ஆங்கில நாளேடான ‘சவுதி கெஸட்' பத்திரிகையின் ஆசிரியராக உள்ள காலெத் அல்மயீனா விரைவில் ஓய்வு பெறவுள்ளதையடுத்து, சொமய்யா ஜபர்தி என்ற பெண் அந்த நாளேட்டின் அடுத்த ஆசிரியராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
இதன்மூலம், சவுதி அரேபியாவில் பத்திரிக்கை ஆசிரியராக பதவியேற்க இருக்கும் முதல் பெண் என்ற பெருமையை சொமய்யா ஜபர்தி பெற இருக்கிறார். இது குறித்து கருத்து கூறிய சொமய்யா ஜபர்தி, ‘இப்போது தான் கட்டுப்பெட்டித்தனம் என்ற கண்ணாடி மாளிகையின் மேற்கூரை விரிசல் விட்டுள்ளது. விரைவில் வாசற்கதவும் விரிவடையும் என நம்புகிறேன்.
எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பணியின் மூலம் சவுதியில் வாழும் பல பெண்கள் அடுத்தடுத்து ஊடக துறையில் தடம் பதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் துளிர் விடுகிறது.
என்னைப் போலவே மற்ற பெண்களும் பெரிய பொறுப்புகளை ஏற்கும் நாள் வரை இந்த நியமனத்தின் மூலம் பெண்ணுரிமையை வென்றெடுத்து விட்டோம் என்று உறுதியாக கூறி விட முடியாது' எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications