"மலைக்கு அடியில் 8,000 நிலநடுக்கங்கள்!" ஆய்வாளர்கள் நடத்திய பயங்கர சோதனை! அதிர வைக்கும் பின்னணி
பெர்ன்: சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கு அடியில் சுமார் 1.5 கிலோமீட்டர் ஆழத்தில், விஞ்ஞானிகள் ஒரு விசித்திரமான ஆய்வை நடத்தியுள்ளனர். அதாவது பூமிக்கு அடியில் செயற்கையாக 8,000 நிலநடுக்கங்களைத் தூண்டிவிட்டு, அதன் ரகசியங்களை ஆராயும் இந்தச் சோதனை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்
இயற்கைச் சீற்றமான நிலநடுக்கம் எப்போது, எப்படி வரும் என்பது இன்றும் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தும் இயற்கை பேரிடராக நிலநடுக்கம் உள்ளது. ஒவ்வொருமுறையும் நிலநடுக்கம் ஏற்படும்போது இதனால் அதிகளவில் பொதுமக்கள் உயிரிழக்கிறார்கள். நிலநடுக்கம் ஏற்படுவதை முன்கூட்டியே கண்டறிய முடிந்தால் விலைமதிப்பற்ற பல உயிர்களை நம்மால் காப்பாற்ற முடியும்.

ஆய்வு
இந்த புதிருக்கு விடை காண, சுவிஸ் விஞ்ஞானிகள் ஒரு ஆபத்தான முயற்சியைக் கையில் எடுத்துள்ளனர். பெட்ரெட்டோ லேப் எனப்படும் மலைக்கு அடியிலான பிரம்மாண்ட ஆய்வகத்தில் இந்தச் சோதனை நடந்துள்ளது. ஆல்ப்ஸ் மலையின் உட்பகுதியில் ஐந்து கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு சுரங்கப்பாதைக்குள் இந்த ஆய்வுக்கூடம் அமைந்துள்ளது. அங்குச் செல்வதற்கு விஞ்ஞானிகள் பிரத்யேக மின்சார வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர்.
இது தொடர்பாக ஆய்வை வழிநடத்திய இடிஹெச் சூரிச் (ETH Zurich) பேராசிரியர் டொமினிகோ ஜியார்டினி கூறுகையில், "எங்கள் தலைக்கு மேல் ஒன்றரை கிலோமீட்டர் மலை இருக்கிறது... நிலநடுக்கத்தின் போது பாறைகள் எப்படி நகர்கின்றன, அழுத்தம் எப்படி உருவாகிறது என்பதை மிக அருகில் இருந்து எங்களால் பார்க்க முடிகிறது" என்கிறார்.
என்ன ஆய்வு
'FEAR-2' (Fault Activation and Earthquake Rupture) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் நோக்கம், நிலநடுக்கங்கள் தூண்டப்படும் விதத்தைப் புரிந்து கொள்வது தான். பூமிக்கு அடியில் பாறைகளின் இடப்பெயர்வு மற்றும் நிலநடுக்கத்தின்போது உருவாகும் அழுத்தத்தை நூற்றுக்கணக்கான சென்சார்கள் மூலம் நான்கு நாட்களாக விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் எதிர்காலத்தில் நிலநடுக்கங்களால் ஏற்படும் ஆபத்துகளை முன்கூட்டியே கணிக்கவும், சேதங்களைக் குறைக்கவும் முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.
பல நூறு சென்சார் கருவிகள்
நான்கு நாட்கள் நடந்த இந்த சோதனையில் ஒவ்வொரு தூண்டுதல் தருணத்தையும் பதிவு செய்ய நூற்றுக்கணக்கான சென்சார் கருவிகள் நிறுவப்பட்டன. விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி எதிர்பார்த்த அளவிலான பெரிய நிலநடுக்கத்தைத் தூண்ட முடியவில்லை என்ற போதிலும் டேட்டா சேகரிக்க தேவையான அளவுக்கு நிலஅதிர்வுகளை ஏற்படுத்த முடிந்ததாக ஆய்வாளர்கல் தெரிவித்துள்ளனர்.
8000 நிலநடுக்கங்கள்
நாங்கள் நினைத்த அளவைவிடச் சற்றே குறைவாகவே பதிவானது என்று ஜியார்டினி வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும், மேலே நிலத்தில் வாழும் சாதாரண மக்கள் உணராத வகையில் மிகக் குறைந்த அதிர்வுகளாக இவை இருந்தன. ஆனால், பூமிக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த அதிநவீன இயந்திரங்கள் இந்த 8,000 சிறிய நிலநடுக்கங்களின் ஒவ்வொரு நொடியையும் துல்லியமாகப் படம் பிடித்துள்ளன.
இயற்கையை ஆராய்வது என்பது எப்போதுமே கத்தி மேல் நடப்பது போன்றதுதான். நிலநடுக்கத்தைத் தூண்டிப் பார்ப்பது ஆபத்தாகத் தெரிந்தாலும், லட்சக்கணக்கான உயிர்களைக் காக்க இதுபோன்ற அபாயகரமான சோதனைகள் தேவைப்படுகின்றன. மலைக்கு அடியில் ரகசியமாக நடந்த இந்த 8,000 நிலநடுக்கங்கள், எதிர்காலத்தில் நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்டறிவதில் ஒரு மிக பெரிய மைல்கல்லாக அமையப் போகிறது என்பதில் சந்தேகமில்லை.












Click it and Unblock the Notifications