மூளைக்குள் அடிக்கும் ஃபிளாஷ்! ஒருவர் உயிரிழக்கும் போது என்ன நடக்கும்? திகைத்து நின்ற ஆய்வாளர்கள்
சியாட்டல்: பொதுவாக ஒருவர் உயிரிழக்கும் போது அவரது மூளையில் என்ன நடக்கிறது என்பது பல நூற்றாண்டுகளாகச் சாதாரண மக்களையும் ஆய்வாளர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி இருந்தது. இதற்குப் பதிலைக் கண்டுபிடிக்க ஆய்வாளர்கள் தீவிரமாக முயன்று வருகிறார்கள். இதற்கிடையே சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் இதற்கான பதிலை அளிப்பதாக இருக்கிறது.
பூமியில் பிறக்கும் ஒவ்வொரு உயிரினும் ஒரு நாள் இந்த பூமியை விட்டு போயே தீர வேண்டும். அதுவே இயற்கையின் விதி. ஒருவரால் நிரந்தரமாக இங்கு இருக்கவே முடியாது.

உயிரிழக்கும் போது என்ன நடக்கும்:
அதேநேரம் உயிரிழக்கும் போது உடலில் என்ன நடக்கும்.. உயிரிழந்த பிறகு என்ன நடக்கும் என்பது குறித்துப் பல வித ஆய்வுகள் நடந்து வருகிறது. மத ரீதியாகவும் சரி, அறிவியல் ரீதியாகவும் சரி இதற்கான பதிலை கண்டறியப் பலரும் முயன்று வருகிறார்கள்.
உயிரிழக்கும் நேரத்தில் நமது மூளையில் என்ன நடக்கும் என்பது குறித்த ஆய்வுகளும் பல காலமாகவே நடந்து வருகிறது. இதற்கிடையே ஃபிரான்டியர்ஸ் இன் ஏஜிங் நியூரோ சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு முடிவுகளில் இது குறித்து விளக்கியுள்ளனர். ஒருவர் உயிரிழக்கும் போது அவரது மூளையில் என்ன நடக்கிறது என்பதை இது படம் பிடித்துக் காட்டுகிறது.. இது நமக்கு இருக்கும் பல சந்தேகங்களுக்குப் பதில் அளிப்பதாக இருக்கும்.
மூளை என்ன செய்யும்:
அதன்படி உயிரிழக்கும் தறுவாயில் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளை மூளை மீட்டெடுக்கிறதாம். அதாவது உயிரிழக்கும் போது வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்கள் அவர்கள் நினைவுக்கு வந்து செல்வதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆய்வாளர்கள் மேலும் கூறுகையில், "நினைவுகளை மீட்டெடுக்க மூளை ஒரு வித அலைகளை உருவாக்குவதை நாங்கள் கண்டறிந்தோம். இதன் மூலம் உயிரிழக்கும் சமயத்தில் ஒருவருக்கு வாழ்க்கையில் நடந்த எல்லா முக்கிய விஷயங்களும் கடைசியாக ஒரு முறை நினைவுக்கு வந்து செல்லும்" என்கிறார்கள்.
87 வயதான நோயாளி ஒருவர் வலிப்புக்குச் சிகிச்சை பெற்றபோது திடீரென இதய செயலிழப்பு ஏற்பட்டது. அப்போது அவரது தலையில் பொருத்தப்பட்டிருந்த கருவி சுமார் 900 வினாடிகள் அவரது மூளை செயல்பட்டதைக் கண்டறிந்துள்ளது. அதாவது அவரது இதயம் துடிப்பதை நிறுத்திய பிறகும் சில நொடிகள் மூளை செயல்பட்டுள்ளது.
அலைகள்:
காமா அலைவுகள் மற்றும் டெல்டா, தீட்டா, ஆல்பா மற்றும் பீட்டா என அழைக்கப்படும் நரம்பு அலைவுகளில் மாற்றம் ஏற்பட்டதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த அலைகள் உயிருடன் இருக்கும் போது மட்டுமே ஏற்படும். அதிலும் குறிப்பாகக் காமா அலைகள் நினைவுகளை மீட்டெடுப்பதுடன் தொடர்புடையது. ஒருவரது இதயத் துடிப்பு நின்ற பிறகும் இதுபோன்ற அலைகள் ஏற்படுவது, ஆய்வாளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதயம்:
இதயம் துடிப்பது நின்றவுடன் மனித உடலில் என்ன நடக்கும்.. மூளைக்குள் நடக்கும் மாற்றம் என்ன என்பதைக் கண்டறிய இதுபோன்ற ஆய்வுகள் உதவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சரியாக ஒருவரது உடலில் இருந்து எப்போது உயிர் பிரிகிறது.. உடல் உறுப்பு தானங்கள் குறித்து எப்போது முடிவெடுக்கலாம் எனப் பல கேள்விகளுக்கு இந்த ஆய்வுகள் பதிலைத் தரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications