மடகாஸ்கரை தொடர்ந்து தான்சானியாவில் ஆமை கறி சாப்பிட்டவர்கள் அடுத்தடுத்து 7 பேர் பலி- அதிபர் இரங்கல்!
ஜான்சிபார்: மடகாஸ்கரைத் தொடர்ந்து தான்சானியாவின் ஜான்சிபார் தீவுகளில் ஆமை கறி சாப்பிட்டதால் குழந்தை உட்பட 7 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆமைக் கறி சாப்பிட்டதால் உயிரிழந்தவர்களுக்கு ஜான்சிபார் அதிபர் Hussein Mwinyi ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடலோர நாடுகளில் வசிக்கும் மக்கள் ஆமை கறி சாப்பிடுவது இயல்பானது. கடல் பயணம் மேற்கொள்ளக் கூடியவர்கள் தவிர்க்க இயலாத சூழலில் ஆமை கறியை சாப்பிட நேரிடுவதும் உண்டு.
டெல்லி பாஜக பிரசார பேனரில் குடிசைவாசியாக தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் படம்- புதிய சர்ச்சை
தான்சானியா ஆமை கறி விருந்து
மடகாஸ்கர், தான்சானியா போன்ற நாடுகளில் நாம் கோழி, ஆடு வெட்டி விருந்து வைப்பது போல ஆமை கறி விருந்து வைக்கும் நடைமுறை உண்டு. தான்சானியாவின் ஜான்சிபார் தீவுகளில் உள்ள பெம்பா என்ற பகுதியில் கடந்த வியாழக்கிழமையன்று ஒரு வீட்டில் ஆமை கறி விருந்து பரிமாறப்பட்டிருக்கிறது.
அடுத்தடுத்து மரணம்
இந்த விருந்துக்கு அடுத்த நாள் ஆமை கறி சாப்பிட்டவர்களில் 3 வயது குழந்தை முதலில் உயிரிழந்தது. அதே நாள் இரவில் மேலும் 2 பேர் உயிரிழந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மேலும் 4 பேர் மரணம் அடைந்தனர். இதனையடுத்து ஆமை கறி விருந்தில் பங்கேற்ற 38 பேர் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இளைஞர்களுக்கு பாதிப்பு இல்லை
இது தொடர்பாக தான்சானியா மருத்துவர்கள் கூறுகையில், குழந்தைகள் மற்றும் முதியவர்களின் உடலில் ஆமை கறி விஷத்தன்மையை ஏற்படுத்தி இருப்பதுதான் காரணம். அதேநேரத்தில் திடகாத்திரமான உடல் வலிமை கொண்ட இளைஞர்களை ஆமை கறி பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
ஆமை கறி மரணம்- அதிபர் இரங்கல்
ஆமை கறி சாப்பிட்டு உயிரிழந்தவர்களுக்கு ஜான்சிபார் அதிபர் Hussein Mwinyi இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தமது ட்விட்டர் பதிவில், பெம்பாவில் ஆமைக்கறி சாப்பிட்டு விஷமானதால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக கூறியுள்ளார். மடகாஸ்கரில் கடந்த மார்ச் மாதம் இதேபோல் ஆமை கறி விருந்து நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் ஆமை கறி சாப்பிட்ட 19 பேர் உயிரிழந்தனர். ஆமை கறி சாப்பிட்டவர்கள் உயிரிழக்க நேரிடுவது குறித்து மருத்துவ வல்லுநர்கள் ஆய்வு செய்தும் வருகின்றனர்.