200 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து நஷ்ட ஈடு தர வேண்டும்... ‘கேப்டனாக’ மாறிய சசிதரூர்!
லண்டன்: இந்தியாவை 200 ஆண்டுகளாக ஆண்ட இங்கிலாந்து, அதற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் வலியுறுத்தியுள்ளார்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை சுமார் 200 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அதேபோல், இலங்கை உள்ளிட்ட வேறு சில நாடுகளையும் தங்களது காலனி நாடுகளாக அவர்கள் நிர்வாகம் செய்து வந்தனர்.
இந்நிலையில், ‘இங்கிலாந்து, தனது முன்னாள் காலனி நாடுகளுக்கு இழப்பீடு அளிக்க வேண்டுமா?' என்ற தலைப்பில், லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் விவாத நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில், காங்கிரஸ் எம்.பி.யும், ஐ.நா.வில் பணியாற்றியவருமான சசிதரூர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவின் பங்கு...
இந்தியாவை இங்கிலாந்து அடிமைப்படுத்துவதற்கு முன்பு, உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு 23 சதவீதமாக இருந்தது. ஆனால், இங்கிலாந்து வெளியேறியபோது, உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு 4 சதவீதமாக குறைந்திருந்தது.

நஷ்ட ஈடு தேவை...
எப்படி? இங்கிலாந்து தனது நலனுக்காகவே இந்தியாவை ஆண்டதுதான் காரணம். இந்தியாவில் அடித்த கொள்ளையால்தான் இங்கிலாந்து தன்னை வளப்படுத்திக்கொண்டது. அதற்காக இந்தியாவுக்கு இங்கிலாந்து நஷ்டஈடு தர வேண்டும்' என்றார்.

புள்ளி விபரங்களோடு..
சுமார் 15 நிமிட பேசிய சசிதரூர், இந்தியாவுக்கு இங்கிலாந்து தார்மீக கடன் பட்டுள்ளது என்ற பொருளில் புள்ளிவிவரங்களோடு உணர்ச்சிகரமாக பேசினார். ஆனால், சசிதரூர் தனது கருத்துகளுக்கு ஆதாரம் எதையும் வெளியிடவில்லை.

அதிக வாக்குகள்...
இந்த விவாத நிகழ்ச்சியில் சசிதரூர் கருத்துக்கு ஆதரவாக 185 ஓட்டுகளும், எதிராக 56 ஓட்டுகளும் பதிவாகின. சிலர் ஆங்கிலேயர் ஆட்சியால் இந்தியா பலன் அடைந்துள்ளதாக பேசினர்.
வீடியோ...
சசிதரூரின் இந்த உணர்ச்சிகரமான பேச்சு அடங்கிய வீடியோ யூடியூப்பில் வெளியாகியுள்ளது. இதுவரை அந்த வீடியோவை 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர்.

டிரெண்ட்...
இது தவிர சசிதரூரின் கருத்து சமூகவலைதளப் பக்கங்களிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சசிதரூரின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் தங்களது கருத்துக்களை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர். இதனால், சசிதரூரின் பெயர் டிரெண்ட்டை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பட்டியல் போடலாமே தரூர்
எல்லாம் சரி, ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற பின்னர் இந்தியா, அரசியல்வாதிகளிடம் சிக்கித் தவிப்பதையும், அவர்களிடமிருந்து இந்தியா "விடுதலை" பெற்றால் கிடைக்கும் பலன்கள் குறித்தும் சசி தரூர் ஒரு பட்டியலைப் போட்டால் இன்னும் நலமாக இருக்குமே.












Click it and Unblock the Notifications