மீண்டும் வந்த ட்ரம்ப்.. குஷியில் ஹசீனா தரப்பு! வங்கதேசத்தில் நிகழப்போகும் அரசியல் மாற்றம்
டாக்கா: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்று புதிய அதிபராக தேர்வாகியுள்ளார். இது வங்கதேச அரசியலில் ஹசீனா தரப்புக்கு ஆதரவான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகின் எங்கோ ஒரு மூலையில் ஏற்படும் நிகழ்வு, மறு மூலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கேள்விப்பட்டிருப்போம். அப்படியொரு சம்பவத்தைதான் அமெரிக்க அதிபர் தேர்தல் ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாகவே அமெரிக்க தேர்தல் முடிவுகள் சர்வதேச நாடுகளில் சில தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது இந்த தேர்தல் வங்கதேச அரசியலில் ஹசீனா தரப்பு சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

முதல் விஷயம்: வங்க தேசத்தில் நடந்த கலவரத்திற்கும், அமெரிக்க அதிபராக இருந்த ஜோ பைடனின் கொள்கைக்கும் சம்பந்தம் இருக்கிறது. பைடன் நிர்வாகம் பலதரப்பு வர்த்தகம், உலக நாடுகளுடன் நெருங்கிய தொடர்பு ஆகியவற்றை முன்னிறுத்தியது. இந்த தொடர்பு ஆயுதம் மூலமாகவும் இருக்கலாம், பொருளாதாரம் சார்ந்தும் இருக்கலாம். உதாரணமாக வங்கதேசத்தில் ஆயத்த ஆடை உற்பத்தி அதிகம். எனவே, இந்த நாட்டுடன் உறவு வைத்துக்கொள்வதன் மூலம், அமெரிக்க மக்களின் ஆடை தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
வங்கதேச அரசியல்: ஆனால் இதற்கான முன்னெடுப்புகளை ஹசீனா அரசு பெயரளவில் மட்டுமே செய்து வந்தது. இன்னும் குறிப்பாக சொல்வதெனில், அமெரிக்காவுடன் வர்த்தக உறவு கொள்வதில் ஹசீனாவுக்கு பெரிய ஆர்வம் இல்லை. இதையெல்லாம் பார்த்து வந்த பைடன், மாணவர் போராட்டம் வெடித்த நேரத்தில் கிளர்ச்சிக்கு சப்போர்ட் செய்தார். ஹசீனா அகற்றப்பட்டு, அரசின் தலைமை ஆலோசகராக யூனுஸ் வந்த போது, அதை வாஞ்சையுடன் பைடன் வரவேற்றார். கடந்த செப்டம்பர் மாதம் ஐநா உச்சி மாநாட்டில் யூனுஸும், பைடனும் ஆரத்தழுவி பேசிக்கொண்டது இவர்கள் நெருக்கம் எப்படியானது என்பதை உணர்த்தியது.
அமெரிக்க அரசியல்: யூனுஸ் மூலம் அமெரிக்க பொருளாதாரத்திற்கான பங்களிப்பை பைடன் தேடிக்கொண்டிருந்தபோதுதான், அதிபர் தேர்தலில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. யாருமே எதிர்பாராத வகையில் கமலா ஹாரிஸ் தோல்வியுற்று, ட்ரம்ப் வெற்றி பெற்றார். ட்ரம்புக்கும், யூனுஸ் தலைமையிலான அரசுக்கும் இடையேயான உறவு கரடுமுரடாகவே இருந்தது.
அதாவது, தீபாவளி வாழ்த்தின்போது வங்கதேசத்தில் இந்துக்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள், பைடன் அவர்களை கைவிட்டுவிட்டார் என்று ட்ரம்ப் குற்றம்சாட்டியிருக்கிறார். பைடனின் ஆதரவு குழுக்கள் வங்கதேசத்தில் அதிகார மையத்திற்கு வந்தது ட்ரம்புக்கு பிடிக்கவில்லை.
ஹசீனாவுக்கு அடித்த லக்: அதிபராக இல்லாதபோதே இப்படியெல்லாம் சொன்னவர், தற்போது அதிபராகி இருப்பதால் யூனுஸ் அரசை சும்மாவா விட்டுவிடுவாரா? இந்த கேள்விதான் ஹசீனா தரப்பை ஆசுவாசப்படுத்தியுள்ளது. இப்படியாக அமெரிக்க தேர்தல் முடிவுகள் ஹசீனாவுக்கு ஆத்ம திருப்தியை கொடுத்திருக்கிறது. இதற்கு பிறகு ட்ரம்ப்பின் அதிகாரத்தை பயன்படுத்தி மீண்டும் வங்கதேசத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என ஹசீனா தரப்பு திட்டம் தீட்டும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
இரண்டாவது விஷயம்: இதற்கு ட்ரம்ப்பின் பொருளாதார கொள்கை நிச்சயம் கைகொடுக்கும். அதாவது ட்ரம்பை பொறுத்தவரை எல்லாம் அமெரிக்காதான். தயாரிப்பு, விற்பனை, வியாபாரம், லாபம் என எல்லாம் அமெரிக்கர்களுக்குதான் வேண்டும் என்று நினைப்பவர். அதனால்தான் கடந்த 2016-2021 ஆட்சி காலத்தில் 'America First' எனும் பாலிசியை பின்பற்றினார். இதன் அர்த்தம், பொருளாதாரத்திற்காக வெளிநாடுகளை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான்.
ஆகவே, ஆயத்த ஆடை உற்பத்தி துறையில் ஜோ பைடன் காலத்தில், அமெரிக்கா- வங்கதேசம் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். அல்லது இறக்குமதி வரிகள் அதிகரிக்கப்படும். இரண்டுமே வங்கதேச பொருளாதாரத்திற்கு பலத்த அடி. இதனால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். இதையே முக்கியமான பாயிண்டாக வைத்து, அரசியல் செய்து "புதியதாக வந்தவர்கள் எதையும் மாற்றவில்லை" என்று கூறி, யூனுஸ் ஆட்சியை கைப்பற்ற ஹசீனா தரப்பு முனையலாம் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications