பாரீஸில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச்சூடு: பெண் தீவிரவாதி உள்பட 3 பேர் சுட்டுக் கொலை
பாரீஸ்: பாரீஸின் புறநநகர் பகுதியான செயின்ட் டெனிஸில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் போலீசார் 7 பேரை கைது செய்தனர்.
பாரீஸ் தாக்குதல்களை நடத்திய தீவிரவாதிகளில் ஒருவர் தப்பியோடியுள்ளார். பாரீஸின் புறநநகர் பகுதியான செயின்ட் டெனிஸில் போலீசார் அந்த தீவிரவாதியை இன்று அதிகாலை தேடினர். அப்போது ஒரு வீட்டில் இருந்த 3 பேர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசாரும் அவர்களை நோக்கி சுட்டனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் போலீசார் பலர் காயம் அடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டிற்குள் பதுங்கி 2 தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர். அப்போது அந்த வீட்டில் இருந்த பெண் தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார். கடந்த வெள்ளிக்கிழமை தற்கொலைப்படை தாக்குதல் நடந்த ஸ்டேடியத்திற்கு அருகே தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பாரீஸ் தாக்குதல்கள் வழக்கு தொடர்பாக போலீசார் இன்று 7 பேரை கைது செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாரீஸில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 129 பேர் பலியாகினர். இதையடுத்து தப்பியோடிய தீவிரவாதிகளை தேட பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். அப்படி ஒரு சோதனையின்போது தான் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.