ட்ரம்ப்-கிம் சந்திப்பு நடந்த ஹோட்டலில் உளவு கருவி.. சிங்கப்பூர் அரசுக்கு எதிராக வெடித்த சர்ச்சை
Recommended Video

சிங்கப்பூர்: வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் நடுவே சிங்கப்பூரில் நடந்த சந்திப்பின்போது, உளவு கருவிகளை வைத்து அது ஒட்டுக்கேட்கப்பட்டதாக சிங்கப்பூர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை சிங்கப்பூர் மறுத்துள்ளது.
எலியும், பூனையுமாக இருந்த, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோரின் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு கடந்த 12ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த சந்திப்பை சிங்கப்பூர் அரசு ஏற்பாடு செய்தது. இதற்கு சிங்கப்பூருக்கு சுமார் ரூ.81 கோடி செலவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செந்தோசா தீவில் ஆடம்பர ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில் அமெரிக்கா-வட கொரியா நடுவே, அணு ஆயுத ஒழிப்பு தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது.

உளவு கருவி
இதனிடையே, இரு நாட்டு அதிபர்கள் பேச்சுவார்த்தை நடத்திய ஹோட்டலில் உளவு கருவி மூலம் சிங்கப்பூர் அரசு ஒட்டு கேட்டதாக குற்றச்சாட்டு வைரலாக சுற்றி வருகிறது. இந்த வதந்தியை நிரூபிக்க இதுவரை ஆதாரங்கள் ஏதும் வெளியாகவில்லை. ஆனால், அந்த தகவலை நீங்களே பாருங்கள். இரு நாட்டு அதிபர்கள் சந்திப்பை, செய்தியாக்க உலகெங்கிலுமிருந்து 2500க்கும் மேற்பட்ட நிருபர்கள் அங்கு வந்திருந்தனர்.

நிருபர்களுக்கு ஃபேன்
செய்தி சேகரிக்க வந்த நிருபர்களுக்கு சிங்கப்பூர் அரசு சார்பில் ஒரு கிஃப்ட் தரப்பட்டது. அதில் பேனா, நோட் பேட், வாட்டர் பாட்டில் மற்றும் ஒரு யூஎஸ்பி மின்விசிறி இருந்தது. அது மிக சிறிய அளவிலானது. யூஎஸ்பி வயரை, லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரிலுள்ள USB port பகுதியில் பொருத்தினால், அந்த ஃபேன் சுழலும். நிருபர்கள் வசதிக்காக இவற்றை சிங்கப்பூர் அரசு கொடுத்திருந்தது.
|
ஒட்டுகேட்பு கருவி
ஆனால், சீனாவில் தயாரிக்கப்பட்ட அந்த யூஎஸ்பி ஃபேனில் உளவு கருவி இருந்ததாகவும், லேப்டாப் கேமரா, மைக்ரோபோனை அது தானாகவே ஆன் செய்து தகவல்களை வெளியே கசிய விடும் என்றும் பிரான்ஸ் நாட்டு அரசு ரேடியோ ஒலிபரப்பு ஸ்தாபனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியை பிபிசியும் வெளியிட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூர் மறுப்பு
அதேநேரம், சிங்கப்பூர் அரசாங்கம் இந்த செய்திகளை மறுத்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்தோசா வளர்ச்சி கழகம், யூஎஸ்பி ஃபேன்களை கிஃப்ட்டாக நிருபர்களுக்கு வழங்கியது. கிம்-ட்ரம்ப் சந்திப்பு உறுதியாகும் முன்பே இந்த ஃபேன்கள் தயாரிக்கப்பட்டுவிட்டன. எந்த சுற்றுலா பயணி செந்தோசா வந்தாலும் அவர்களுக்கு யூஎஸ்பி ஃபேன்கள் கிஃப்ட்டாக வழங்கப்படுவது வழக்கமான நடைமுறை. இத்தீவில் சற்று வெப்ப சூழல் நிலவுவது வழக்கம். இரு நாட்டு அதிபர்கள் சந்திப்பு நடந்தபோது, தட்பவெப்பம் 33 டிகிரி செல்சியசையொட்டி இருந்தது. எனவே ஃபேன்களை வழங்கியிருந்தோம். இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications