அமெரிக்க நாடாளுமன்றம் அருகே சிறிய ரக ஹெலிகாபட்ரை தரையிறக்கிய போஸ்ட்மேன்: பரபரப்பு
வாஷிங்டன்: புளோரிடாவைச் சேர்ந்த தபால்காரர் ருவர் சிறிய ரக ஹெலிகாப்டரை அமெரிக்க கேபிட்டல் கட்டிடம் அருகே தரையிறக்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்தவர் தபால்காரரான டக் ஹ்யூக்ஸ்(61). அவர் கடந்த வாரம் ரஸ்கினில் உள்ள தனது வீட்டில் இருந்து வாஷிங்டன் நகருக்கு கைரோகாப்டர் எனப்படும் சிறிய ரக ஹெலிகாப்டரில் கிளம்பினார்.

புதன்கிழமை மதியம் 1.30 மணிக்கு அவர் வாஷிங்டன் நகரில் உள்ள நாடாளுமன்றமான காங்கிரஸ் கட்டிடத்தின் அருகே உள்ள அமெரிக்க கேபிட்டல் கட்டிடத்தின் புல்வெளியில் தனது ஹெலிகாப்டரை தரையிறக்கினார். நிதி சீர்திருத்தம் குறித்து மக்களின் கவனத்தை ஈர்க்க அவர் அவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.
ஹ்யூக்ஸ் அனுமதி இல்லாமல் விமானத்தை அங்கு தரை இறக்கியதற்காக அவரை கேபிட்டல் ஹில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து ஹெலிகாப்டரை சோதனை செய்தனர். ஹெலிகாப்டரில் குண்டு எதுவும் இல்லை என்பதை தெரிந்து கொண்டவுடன் அவர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
கேபிட்டல் கட்டிடம் மற்றும் வெள்ளை மாளிகை பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு ஏற்பாடுகள், 24 மணி நேர வான்வெளி கண்காணிப்பையும் மீறி அவர் இங்கே தரையிறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின் அமெரிக்க பாதுகாப்பு குறித்தும் கேள்விகள் எழுப்பியுள்ளது இந்த சம்பவம்.
கைது செய்யப்பட்டுள்ளவர் தபால்காரர் தான் என அமெரிக்க தபால்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் கைது செய்யப்பட்டவரின் பெயரை தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications