விதவிதமாய்.. ரகரகமாய்.. பாம்புகளை முதுகில் ஊர விட்டு.. கேட்கும் போதே பீதியைக் கிளப்பும் புதிய மசாஜ்!
எகிப்தில் உடல் வலியை போக்க பாம்பு மசாஜ் செய்யப்படுகிறது.
கெய்ரோ: பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் எகிப்து நாட்டில் பாம்புகளை உடலின் மீது ஊர்ந்து போகவிட்டு உடல் வலியை போக்க மசாஜ் செய்யும் முறை எகிப்து நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அது ஒரு காலம்... குற்றால அருவிக்கரைகளில் எண்ணெய் பாட்டில்களுடன் 'பாடி மசாஜ் செய்ய 100 ரூபாய்' என ஆண்கள் பலர் கூவிக்கொண்டிருப்பார்கள். உடல் முழுவதும் எண்ணெய் தடவி, உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அதை கைகளால் தேய்த்து அழுத்தி நீவிவிடுவார்கள். அந்த சுட்டோடு சுடாக மலை மீதிருந்து தொம்மு தொம்மு என விழும் தண்ணீரில் குளித்தால் உடல் வலியெல்லாம் பறந்து போகும்.
ஆனால் இப்போது நீதிமன்ற உத்தரவு காரணமாக குற்றால அருவிகளி மசாஜ்களுக்கு தடை உள்ளது. எனவே அந்த காட்சிகள் எல்லம் 90'ஸ் கிட்ஸ்ன் பொக்கிஷங்களாக மாறிப்போய்விட்டன.
மவுசு அதிகம்
இப்போது நகரங்களின் இண்டு இடுக்குகளில் மசாஜ் சென்டர்கள் முளைத்துவிட்டன. இன்பாக்ஸ்ல் வந்து விழும் நான்கு மெசேஜ்களில் ஒரு மெசேஜ் நிச்சயம் மசாஜ் பார்களின் ஆஃபர் மெசேஜ்களாக தான் உள்ளது. அந்த அளவுக்கு உடல் மசாஜ்களுக்கு எப்போதுமே கிராக்கி உண்டு.
புதிய மசாஜ்
மசாஜ் செய்து கொள்வதற்காகவே பலர் தாய்லாந்து பறப்பதும் உண்டு. ஆயில் மசாஜ், பவுடர் மசாஜ், தாய் மசாஜ், ஸ்வீடிஷ் மசாஜ், ஹாட் ஸ்டோன் மசாஜ் என பல வகையான மசாஜ்கள் செய்யப்படுகின்றன. ஏற்கனவே இத்தனை மசாஜ்கள் புழக்கத்தில் இருக்கும் நிலையில், திகிலூட்டும் வகையில் எகிப்தில் புதிய மசாஜ் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதுகில் பாம்பு
எகிப்தின் கெய்ரோ நகரில் உள்ள மசாஜ் மையத்தில் தான் பாம்புகளை கொண்டு மசாஜ் செய்து வருகின்றனர். மசாஜ் செய்ய வருபவர்களை குப்புற படுக்க வைத்து, அவர்கள் முதுகின் மேல் பல வகையான பாம்புகளை ஊர்ந்து செல்ல விடுகின்றனர். அந்த பாம்புகள் அவர்களின் தலை முதல் கால் வரை ஊர்ந்து செல்கின்றன.
விஷமற்ற பாம்புகள்
ஒன்றல்ல இரண்டல்ல.. இரண்டு டசனுக்கும் அதிகமான பாம்புகளை உடலின் மீது போடுகிறார்கள். மலைப்பாம்பு முதல் சாரைப்பாம்பு வரை பலவகையான பாம்புகள் உடலில் ஊருகின்றன. இத்தனை பாம்புகளை ஊர விட்டால் அவை கடித்து விடாதா என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். ஆனால் அவை அனைத்துமே விஷத்தன்மையற்றவை. எனவே கடித்தாலும் பயமில்லை.
புத்துணர்ச்சி
பார்ப்பதற்கே மிகவும் அச்சமூட்டக் கூடிய இந்த மசாஜை செய்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டுகின்றனராம். "பாம்பு மசாஜ் செய்து கொள்ளும் போது மிகப்பெரிய புத்துணர்ச்சி ஏற்படுகிறது. உடல் வலி எல்லாம் பறந்து போகிறது" என்கிறார்கள் பாம்பு மசாஜ் வாடிக்கையாளர்கள்.
|
விலை கம்மி தான்
இந்த பாம்பு மசாஜ்க்கு இந்திய மதிப்புபடி சுமார் ரூ.500 வரை கட்டணம் வசூலிக்கின்றனர். சுமார் 20 - 30 நிமிடங்கள் வரை மசாஜ் செய்துவிடுகிறார்கள். மன அழுத்தம் அதிகமாக உள்ளது, உடம்பும் களைப்பாக உள்ளது என பாம்பு மசாஜ் செய்து கொள்ள விரும்புவோர் கெய்ரோவுக்கு படையெடுக்கலாம் பாஸ்.