பெண் பத்திரிக்கையாளரால் காலை வாரிவிடப்பட்ட சிரிய அகதிக்கு ஸ்பெயினில் வேலை
மேட்ரிட்: ஹங்கேரி நாட்டு போலீசாரிடம் இருந்து தப்பித்து ஓடுகையில் பெண் பத்திரிக்கையாளரால் காலை வாரி விடப்பட்ட நபருக்கு ஸ்பெயின் நாட்டில் கால்பந்து பயிற்சியாளர் வேலை கிடைத்துள்ளது.
சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரால் ஏராளாமானோர் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அப்படி சிரியாவில் இருந்து அகதியாக ஹங்கேரிக்கு வந்தவர் ஒசாமா அப்துல் மொஹ்சன்(52). சிரியாவில் கால்பந்து பயிற்சியாளராக இருந்த அவர் தன்னுடன் தனது மகன்கள் முகமது(18) மற்றும் ஜயித்(7) ஆகியோரையும் அழைத்து வந்தார்.

ஹங்கேரி வந்த அகதிகள் போலீசாருக்கு பயந்து ஓடினர். அப்போது பெண் பத்திரிக்கையாளரான பெட்ரா லாஸ்லோ என்பவர் அந்த சம்பவத்தை தனது கேமராவில் படம் பிடித்தார். அப்போது அவர் தப்பியோடிய அகதிகளின் காலை வாரி விட்டார். பெட்ரா நடுவில் காலை விட்டதால் ஒசாமா தனது மகன் ஜயிதுடன் கீழே விழுந்தார்.
இந்நிலையில் ஒசாமா தனது மகன்களுடன் புதன்கிழமை இரவு ஸ்பெயின் வந்தார். இதற்கிடையே ஒசாமா கீழே விழுந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகிவிட்டது. ஸ்பெயினில் உள்ள கெடாபே நகருக்கு வந்துள்ள ஒசாமாவுக்கு கால்பந்து பயிற்சியாளர் வேலை அளிக்கப்பட்டுள்ளது.
கெடாபேவுக்கு வந்த அவரை தேசிய பயிற்சியாளர் பயிற்சி மைய தலைவர் மிகுல் கலான் வரவேற்று வேலைக்கான கடிதத்தை அவரிடம் அளித்தார். கலான் ராயல் ஸ்பானிஷ் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications