இலங்கை வரலாற்றில் மோசமான பாதிப்பு.. பேயாட்டம் ஆடிய டிட்வா புயல்.. 330 மக்கள் உயிரிழப்பு
கொழும்பு: இலங்கையில் டிட்வா மழை புயல் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை வரலாற்றில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய இயற்கை சீற்றமாக இது உருவாகியுள்ளது. தற்போது வரை சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். சுமார் 10 லட்சத்திற்கும் மேல் மக்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது. இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் தொடர்ந்து கவலையளிக்கும் வகையில் உள்ளது.
டிட்வா புயல் இலங்கையில் கோர தாண்டவம் ஆடியுள்ளது. இயல்பு நிலை முற்றிலும் ஸ்தம்பித்து அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு உதவும் வகையில் இந்தியா பேரிடர் மீட்புப் படையை அனுப்பியுள்ளது. புயல் சற்று வலுவிழந்தாலும் இலங்கையில் இருந்து வெளியாகும் தகவல்கள் கவலையளிக்கின்றன. மின்சாரம் , போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

330 மக்கள் உயிரிழப்பு
இலங்கையில் சமீபத்திய வருடங்களில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய இயற்கை சீற்றமாக டிட்வா புயல் அந்த நாட்டை புரட்டி போட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு நிவாரண பொருட்கள் சென்று கொண்டிருக்கின்றன. தற்போதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 330 ஐ தாண்டியுள்ளது. மேலும் 200க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
அவர்களின் நிலை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. மழை வெள்ளத்தில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தால் 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்ச மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். "இலங்கை வரலாற்றில் மிகுந்த சவால் நிறைந்த இயற்கை சீற்றமாக டிட்வா புயல் இருக்கிறது." என்று இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்கே கூறியுள்ளார்.
நினைத்து பார்க்க முடியாத இழப்பு
பாதிப்புகளில் இருந்து எப்படி மீளப் போகிறோம் என்று நினைத்து கூட பார்க்க முடியாதளவுக்கு புயல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் அனுர குமார கூறியுள்ளார். நீர் நிலைகளில் தண்ணீரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. முக்கியமாக கண்டி, பந்துல்லா பகுதிகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
அங்கு பல பகுதிகளின் தொலை தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுலா சென்ற மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். டிட்வா புயலால் இலங்கையில் சிக்கியிருந்து சுமார் 40 தமிழர்கள் நேற்று தமிழ்நாடு திரும்பியுள்ளனர். புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு உலக நாடுகள் தங்களுக்கு உதவ வேண்டும் என்று இலங்கை கோரிக்கை வைத்துள்ளது.
இலங்கை வரலாற்றில் கருப்பு நிகழ்வு
இலங்கையில் இது பருவமழை காலம். ஆனால் பருவமழையில் இப்படி மோசமான பாதிப்புகள் ஏற்பட்டதில்லை. இதற்கு முன்னதாக இலங்கையில் கடந்த 2003 ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சுமார் 254 மக்கள் உயிரிழந்தனர். 100 கணக்கான மக்கள் மாயமாகியிருந்தனர். தற்போது புயல் பாதிப்பில் அதைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications