மெக்காவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 750-ஆக உயர்வு... 850 க்கும் மேற்பட்டோர் காயம்
மெக்கா: திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 750 ஆக உயர்ந்துள்ளது. 850 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு புனிய யாத்திரை மேற்கொள்வதற்காக உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் லட்சக்கணக்கானோர் ஆண்டு முழுவதும் செல்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று (வியாழன்) ஹஜ் புனித யாத்திரைக்காக லட்சக்கணக்கானோர் மினாவில் கூடியிருந்த போது திடீரென நெரிசல் ஏற்பட்டது. மினாவில் சாத்தானின் மீது கல் எறியும் நிகழ்ச்சியின் போது இந்த நெரிசல் நிகழ்ந்தது.
இதனால் மெக்காவில் கூடியிருந்த யாத்ரீகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 750-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 850-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மீட்புப் பணியில் 250 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள், ஆயிரக்கணக்கான மீட்பு படையினர் ஈடுபட்டனர்.
பல்வேறு நாடுகளில் இருந்தும் புனித யாத்திரை மேற்கொள்வதால் பலியானவர்களின் விவரங்கள் இன்னும் முழுமையாக தெரியவில்லை. எனினும், பலியானவர்களில் இந்தேனேஷியா, மற்றும் மலேஷியா நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2 வாரத்தில் இரண்டாவது முறையாக மெக்காவில் மிகப்பெரிய துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. செப்டம்பர் 11-ம் தேதி மெக்காவில் கிரேன் விழுந்து 107 பேர் உயரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மெக்காவில் 1990-ம் ஆண்டு நடைபெற்ற விபத்தில் 1,426 பேர் உயிரிழந்தனர். 1994-ம் ஆண்டு நடைபெற்ற விபத்தில் 270 பேரும், 1998-ம் ஆண்டு 118 பேரும், 2001-ம் ஆண்டு35 பேரும் மெக்கா மசூதி விபத்தில் உயிரிழந்துள்ளனர்.