கிம் ஜோங் செக்சி... இது இவரோட பெயரோட 'டிரெய்லர்'தான்.. முழுப் பேரை சொல்ல 5 நிமிஷம் ஆகும்!!
ஸ்டாக்ஹோம்: உலகிலேயே 63 வார்த்தைகள் கொண்ட நீண்ட பெயரை உடைய மனிதர் என்ற பெருமையை ஸ்வீடிஷ் வாலிபர் ஒருவர் பெற்றுள்ளார்.
பெயர் என்பது ஒருவரை அடையாளப் படுத்துவதற்காக மட்டுமல்ல என்பதை பலர் நிரூபித்து வருகின்றனர். நமது காலத்திற்குப் பின்னரும் காலம் நமது பெயரைச் சொல்ல வேண்டும் என்பது தான் பலரின் ஆசையும். ஆனால், 63 வார்த்தை பெயரைப் பெற்ரே இந்த வாலிபர் கின்னசில் இடம் பெற்று விட்டார்.
29 வார்த்தைகள்...
கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் 29 வார்த்தைகள் கொண்ட எடின்பரோவைச் சேர்ந்த ஒருவரது பெயரே(வாழும் நபர்) மிக நீண்டது என்ற சாதனையைப் பெற்றிருந்தது.
ஸ்வீடன் மனிதர்...
ஆனால் இப்போது அந்த சிறப்பை தனதாக்கிக் கொண்டுள்ளார் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர். இவரது பெயரில் 63 வார்த்தைகள் உள்ளன.
இது தான் அவரது பெயர்...
கிம் ஜோங் செக்சி குளோரியஸ் பீஸ்ட் டிவைன் டிக் பாதர் லவ்லி அயர்ன் மேன் யூனிக் பொ உன் வின் சார்லி கோரா கவோஸ் மெஹன் ஹன்சா கிம்மி ஹம்பெரோ யூனோ மாஸ்டர் ஓவர் டான்ஸ் ஷேக் பவுடி பெபோப் ராக்ஸ்டெடி ஷ்ரெட்டர் குங் உல்ப் ரோட் ஹவுஸ் கில்காமெஷ் பிளாப் கைய் தியோ இம் யோடா பங்கி பாய் ஸ்லாம் டக் சுக் ஜோர்மா சுக்கா பெக்கா ரயான் சூப்பர் ஏர் ஊய் ருஸ்ஸல் சல்வடார் அல்போன்ஸ் மொல்கன் அக்டா பப்பா லாங் நமே எக்.
கின்னஸ் சாதனை...
பப்பா லாங் நமே எக் என சுருக்கமாக அழைக்கப்படும் இவர் தற்போது மிக நீளமான பெயருடையவர் என்ற பிரிவில் கின்னசில் இடம் பிடித்துள்ளார்.
18 வயதிலிருந்து...
ஸ்டாக்ஹோம் அருகே உள்ள ஹனிங்கே என்ற நகரைச் சேர்ந்த இவர் அலெக்சாண்டர் எக் என்ற தனது பெயரைப் பதினெட்டு வயதிலிருந்து மாற்றி வந்துள்ளார்.
பெயர் மாற்றக் கட்டணம்...
ஸ்வீடனில் ஒரு நபர் தனது பெயரைக் கட்டணமின்றி ஒரு முறை மாற்றிக்கொள்ளமுடியும். அதன்பின் ஒவ்வொருமுறையும் பெயர் மாற்றக் கட்டணமாக 149 அமெரிக்க டாலர்களைச் செலுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
63 வார்த்தைகள்...
அலெக்சாண்டர் இதுவரை ஆறு முறை பெயரை மாற்றியுள்ளார். ஒவ்வொருமுறையும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளுடன் தற்போது மொத்தம் 63 வார்த்தைகள் அவரது பெயருடன் இணைந்துள்ளது.
குழப்பம்...
அவருக்கு வரும் கடிதங்களோ, மின்சாரக் கட்டணத் தகவல்களோ தாமதமாகவே வரும் என்று கூறும் இவர் ஒருமுறை உசாமா பின் எக் என்ற பெயரில் தனக்கு வந்த கடிதத்தைப் பார்த்து தனது பெற்றோர்களே குழம்பிப் போனார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.