அமெரிக்காவில் ஸ்டாலின் பறக்கவிட்ட சிக்சர்.. கூகுள் நிறுவனத்துடன் டீல்.. சென்னைக்கு வருகிறது AI லேப்!
சான் பிரான்சிஸ்கோ: கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, தமிழ்நாட்டில் AI ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அமெரிக்காவில் கையெழுத்தாகி உள்ளன. கூகுள் நிறுவனத்துடன் இணைந்து 20 லட்சம் மாணவ மாணவிகளுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 17 நாள் பயணமாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் சந்திப்பில் அவர் பங்கேற்ற நிலையில், 4 ஆயிரத்து 100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 900 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதேபோல், பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ஃட் நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதுதொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவது பற்றி அந்த நிறுவனங்களின் உயரதிகாரிகளுடன் பேசியதாக தெரிவித்தார். ஆசியாவின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளில் தமிழ்நாடு முன்னணியில் திகழும் வகையில், பல்வேறு வாய்ப்புகளையும் மற்றும் வணிக ஒப்பந்தங்களையும் வலுப்படுத்தும் முடிவுடன் அரசு செயல்பட்டு வருவதாக மு.க.ஸ்டாலின் பதிவிட்டார்.
கூகுள் உடன் டீல்: இந்நிலையில், தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைப்பது தொடர்பாக கூகுள் நிறுவனத்துடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது. இதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதனால், தமிழகத்தில் மாணவ, மாணவியருக்கு கூகுள் உதவியுடன் ஏ.ஐ. தொழில்நுட்பம் பற்றிய பயிற்சி வழங்கப்படும்.
இதுதொடர்பாக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) ஆய்வகம் அமைப்பதற்காக கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தத்தினால், நான் முதல்வன் திட்டத்தின் வழியே, செயற்கை நுண்ணறிவில் 20 லட்சம் மாணவ, மாணவிகள் திறன்களை பெற செய்ய இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம்.
இவற்றுடன், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது மற்றும் எம்.எஸ்.எம்.இ. எனப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை செயல்படுத்துவது மற்றும் கிராமப்புற பொருளாதாரம் மேம்பட செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். முதல்வர் மு.க. ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தின் முதல் நாளில், அதிக தாக்கம் ஏற்படுத்த கூடிய பல்வேறு துறைகளில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளன.
நான் முதல்வன் - AI: இதன்படி, சென்னை, கோவை மற்றும் மதுரை நகரங்களில் புதிய நிறுவனங்கள் அமையக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகம் டிரில்லியன் டாலர் பொருளாதாரம் நோக்கி முன்னேறுவதற்கான பணியில் சர்வதேச நிறுவனங்களுடன் நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம்.
நான் முதல்வன் திட்டத்தின்கீழ் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் இணைந்து இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும், இதன் மூலம் 20 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறனை வளர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் முதலீடுகளையும், வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்காகவும் அமெரிக்கா நாட்டுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆகஸ்ட் 30 அன்று அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து பேசினார்.
ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட்: தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக ஆகஸ்ட் 27 அன்று இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு சான்பிரான்சிஸ்கோ சென்றடைந்தார். சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் முதல்வர் தலைமையில் ஆக.29அன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக ஆக. 30 அன்று தமிழக முதல்வர் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.
ஆப்பிள் நிறுவனம்: ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட்போன்கள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள், கையடக்க கணினி (TAB) மற்றும் ஸ்மார்ட் கைகடிகாரங்கள், Headphones, Airpod போன்ற அணியக்கூடிய மின்னணு பொருட்கள் மற்றும் பாகங்கள் ஆகியவற்றை வடிவமைத்து, தயாரித்து சந்தைப்படுத்துவது மற்றும் பல்வேறு தொடர்புடைய சேவைகளை மேற்கொண்டு வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் கார்ப்பரேட் தலைமையகம் கலிபோர்னியாவின் குபெர்டினோவில் அமைந்துள்ளது. 27 நாடுகளில் 530 உலகளாவிய விற்பனை நிலையங்களுடன் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும்.
தமிழகத்தில் அமைந்துள்ள ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ், ஹான் ஹய் (ஃபாக்ஸ்கான்), பெகட்ரான், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. ஆப்பிள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை தமிழக முதல்வர் சந்தித்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். தமிழக முதல்வர் ஆப்பிள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை சந்தித்து பேசியபோது, உலக மின்னணு சாதனங்கள் உற்பத்தி வரைபடத்தில் தமிழகத்துக்கான இடத்தை உறுதி செய்ததற்காக ஆப்பிள் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், மாநிலத்தின் உற்பத்தி சூழலை மேம்படுத்த தமிழக அரசின் பல்வேறு முயற்சிகளை கோடிட்டுக் காட்டியதோடு, தமிழகத்தில் திறன் வளர்ச்சி மிகுந்த இளைஞர்கள், பெண் கல்வி மற்றும் அவர்களின் திறன் வளர்ச்சி குறித்தும், தொழில்துறை, வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து தளவாட வசதிகள் போன்றவற்றில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருவது குறித்தும் எடுத்துரைத்தார். எதிர்காலத்தில் இதனை மேலும் வலுப்படுத்தி, ஆசியாவின் உற்பத்தி மையமாக தமிழகத்தை உருவாக்க இருப்பதாக முதல்வர் தெரிவித்தார்.
இந்தியாவிலேயே தொழில் தொடங்குவதற்கு மிகவும் உகந்த மாநிலமாக அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் விளங்கும் தமிழகத்தில் ஆப்பிள் நிறுவனம் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று முதல்வர் அழைப்பு விடுத்தார்.
கூகுள் நிறுவனம்: கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு, ஆன்லைன் விளம்பரம், தேடுபொறி தொழில்நுட்பம் (Search Engine Technology), கிளவுட் கம்ப்யூட்டிங், கணினி மென்பொருள், குவாண்டம் கம்ப்யூட்டிங், இ-காமர்ஸ் மற்றும் நுகர்வோர் மின்னணுவியல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் தொழில்நுட்ப நிறுவனமாகும். கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் (Alphabet) அமெரிக்க பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். கூகுள் நிறுவனத்தின் தலைமையகம் கலிபோர்னியாவின் மவுண்டன் வியூவில் அமைந்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை தமிழக முதல்வர் சந்தித்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, தமிழகத்தில் AI ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கூகுள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை மவுண்டன் வியூ வளாகத்தில் சந்தித்த போது, தமிழகத்தில் தயாரிக்கப்படும் பிக்சல் 8 போன்கள் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும், கூகுள் நிறுவனத்தின் பிற தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை தமிழகத்தில் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், ஸ்டார்ட்-அப்கள், தொழில்துறை சுற்றுச்சூழல் இயக்கம் மற்றும் எதிர்காலத்துக்கான திறன் ஆகியவற்றில் AI கண்டுபிடிப்புகள் மூலம் வளர்ச்சியை அதிகரிப்பது குறித்தும் பேசினார்.
இந்தியாவின் மிகப்பெரிய திறன் மேம்பாட்டு முயற்சியான 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், கூகுளுடன் இணைந்து எதிர்காலத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களை அதிநவீன AI திறன் வளர்ச்சியுடன் தயார்படுத்த தமிழகம் தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.
கூகுள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: தமிழக முதல்வர் முன்னிலையில், கூகுள் நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும் இணைந்து தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்களை நிறுவுவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை தமிழக முதல்வர் சந்தித்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து அழைப்பு விடுத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Linkedin முதன்மை செயல் அலுவலர் யான் ரோஸ்லான்ஸ்கி மற்றும் உயர் அலுவலர்களை சந்தித்து, டேட்டா சென்டர் விரிவாக்கம், Global Capability Centre (GCC) மற்றும் AI திறன் முயற்சிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து பேசினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications