பர்கினா பாசோவில் ஆட்சியை கவிழ்த்து அதிபரை சிறை பிடித்த ராணுவம்: பதட்டம்
உவாகடூகூ: மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவில் தேர்தல் நடக்க சில வாரங்களே உள்ள நிலையில் முன்னாள் அதிபர் பிளெய்சின் ராணுவ ஆதரவாளர்கள் ஆட்சியை கவிழ்த்து அதிபர் மிஷல் கபான்டோவை சிறை பிடித்துள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவில் இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் முன்னாள் அதிபர் பிளெய்ஸ் கம்போரின் ஆதரவாளர்களான ராணுவ பாதுகாவலர்கள் ஆட்சியை கவிழ்த்துள்ளனர். அவர்கள் அதிபர் மிஷல் கபான்டோ மற்றும் பிரதமர் யாகூபா இசாக் ஜிதா ஆகியோரை சிறை பிடித்துள்ளனர்.
அதிபர் மாளிகையை பிளெய்சின் ஆட்கள் பாதுகாத்து வருவதால் அதை நெருங்க முடியவில்லை. அவர்கள் ஏன் ஆட்சியை கவிழ்த்தார்கள் என்பதற்கான காரணத்தை இன்னும் தெரிவிக்கவில்லை. அதிபர், பிரதமர் தவிர்த்து பல அமைச்சர்களையும் பிளெய்சின் ஆட்கள் சிறை பிடித்துள்ளனர்.
இந்த செய்தி அறிந்த பொதுமக்கள் ராணுவத்தின் செயலை கண்டித்து தலைநகரில் போராட்டம் நடத்தினர். அப்போது ராணுவத்தினர் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைத்தனர். போராட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் 3 பேர் பலியாகினர், 60 பேர் காயம் அடைந்தனர்.
ராணுவத்தின் இந்த செயலை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கண்டித்துள்ளார். ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளதால் பர்கினா பாசோவில் பதட்டமான சூழல் நிலவுகிறது.