வாவ், what a doctor.....!
மிஸ்ஸோரி: டாக்டர் டெட் ரும்மல். மிஸ்ஸோரியின் ஓ பாலன் நகரில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றும் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர். இவரைப் பார்ப்பவர்களுக்கு பெரும் ஆச்சரியம் மட்டுமல்ல, நெகிழ்ச்சியும் ஏற்படுகிறது. காரணம், இவரது உடல் நிலை.
இடுப்புக்குக் கீழ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் டாக்டர் டெட். ஆனால் விசேஷமாக, தயாரிக்கப்பட்ட ஒரு வீல் சேரின் உதவியால் இவர் பெரிய பெரிய அறுவைச் சிகிச்சைகளை செய்து பல நோயாளிகளின் வயிற்றில் பாலை வார்த்து வருகிறார் என்பது ஆச்சரியமான விஷயம்தானே.
2010ம் ஆண்டு இவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. முதுகெலும்பில் ஏற்பட்ட ஒரு ரத்தக் கட்டி உருவாகி, அது உடைந்ததால் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார் டாக்டர் டெட். ஆனால் இன்று அந்த பக்கவாதத்தை தோற்கடித்து இன்னும் தனது பணிகளில் இவர் தீவிரமாக இருக்கிறார் என்பதுதான் டெட்டை, மற்ற டாக்டர்களிடமிருந்து சிறப்பித்துக் காட்டுகிறது.

நம்பவே முடியாத ரெக்கவரி
டாக்டர் டெட், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பின்னர் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் கடுமையான பயிற்சியின் மூலம் மீண்டு வந்துள்ளார். பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வீல்சேர் இவரது மீட்புக்கு பெரும் உதவியாக இருக்கிறது.

நடக்க முடியாது, நிற்க முடியாது
டாக்டர் டெட் ரும்மலுக்கு நடக்க முடியாது, நிற்க முடியாது. இடுப்புக்கு மேல்மதான் இவரால் செயல்பட முடிகிறது.

உருவானது பிரத்யேக வீல்சேர்
இருப்பினும் தனது விடா முயற்சியான மனப்பான்மையால் கடுமையான பயிற்சிகள் செய்ய ஆரம்பித்தார் டாக்டர் டெட். மேலும் பிரத்யேகமான வீல்சேரும் இவருக்காக தயாரிக்கப்பட்டது.

ஆபரேஷன் செய்கிறார்
இந்த வீல்சேரைப் பொருத்தியபடி தனது வழக்கமான வேலைகளில் முன்பை விட உற்சாகமாக ஈடுபட்டு வருகிறாராம் டெட். இதில் இருந்தபடியே ஆபரேஷன்களையும் செய்கிறார்.

ரொம்ப விசேஷமானது
இதுகுறித்து டாக்டர் டெட் ரும்மல் கூறுகையில்,என்னால் இதைச் செய்ய முடியும் என்று உணர்ந்தபோது விசேஷமாக அதை உணர்ந்தேன். எனது வாழ்க்கையை நான் மீண்டும் பெற்றுள்ளதாக நான் உணர்கிறேன்.

2009ல் முதல் சிக்கல்
2009ம் ஆண்டு எனக்கு முதல் சிக்கல் வந்தது. அப்போது எனது முதுகெலும்பில் ரத்தத்தால் நிறைந்த ஒரு கட்டி ஏற்பட்டிருந்ததைக் கண்டறிந்தோம். இதற்கு cavernous hemangioma என்று பெயர்.

ஆபரேஷன் செய்யாவிட்டால் சிக்கலாகும்
அதை உடனடியாக ஆபரேஷன் செய்யாவிட்டால் முழுமையான பக்கவாதம் ஏற்பட வாய்ப்புண்டு.

11 மாதங்கள் கட்டியுடன் வாழ்ந்தேன்
இருப்பினும் 11 மாதங்கள் அந்த கட்டியுடன் வாழ்ந்தேன். இந்த நிலையில்தான் அந்தக் கட்டி திடீரென உடைந்தது. இதையடுத்து உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் இடுப்புக்கு கீழ் பக்கவாதம் ஏற்பட்டு விட்டது. இடுப்புக்குக் கீழ் எனக்கு உணர்வில்லாத நிலை ஏற்பட்டது.

ஆபரேஷன் செய்ய முடியாதே.. வருத்தப்பட்டேன்
அதை அறிந்ததும் எனக்கு ஏற்பட்ட முதல் கவலையே, என்னால் இனி நோயாளிகளை பார்க்க முடியாதா, அவர்களைக் குணப்படுத்த முடியாதா, ஆபரேஷன் செய்ய முடியாதா என்றுதான். வருடத்திற்கு 1000 ஆபரேஷன்கள் வரை செய்கிறவன் நான்.

என்னை நானே தேற்றினேன்
பின்னர் நான் சுதாரித்துக் கொண்டேன். என்னை நானே மறு சீரமைக்க முடிவு செய்தேன். அப்போதுதான் இந்த வீல் சேர் எனக்கு உதவியாக வந்தது.

டாக்டரை வைத்துக் கொண்டு முதல் ஆபரேஷன்
வீல் சேர் உதவியுடன் நான் முதல் ஆபரேஷனை செய்தபோது அவசர உதவிக்காக இன்னொரு மருத்துவரை அருகில் வைத்துக் கொண்டோம். ஆனால் கடைசி வரை அந்த மருத்துவரின் உதவி தேவைப்படவே இல்லை. நானே முழுவதையும் செய்து முடித்தேன்.

தோள்பட்டையைத் தவிர
என்னால் இப்போது எல்லா வகையான ஆர்த்தோ ஆபரேஷன்களையும் செய்ய முடிகிறது. ஆனால் தோள்பட்ட ஆபரேஷனை மட்டுமே செய்ய முடியவில்லை. காரணம், அதை உட்கார்ந்து கொண்டு செய்ய முடியாது என்பதால். ஆனால் அதையும் செய்ய வழியுள்ளதா என்பதை யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்கிறார் சிரித்தபடி.
வாவ், what a doctor.....!












Click it and Unblock the Notifications