அமெரிக்காவில் திடீர் துப்பாக்கி சூடு... விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 3 பேர் பலி
முகில்டியோ: அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியின்போது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் சியாட்டல் நகரின் முகில்டியோ பகுதியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் நேற்றிரவு பார்ட்டி நடைபெற்றுள்ளது. 15 முதல் 20 பேர் வரை இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

திடீரென உள்ளே புகுந்த மர்ம நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தேடுதல் வேட்டையைத் தொடங்கிய போலீசார், 2 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்தனர். லெவிஸ் கவுண்டியில் சிக்கிய அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தீவிரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்பில்லை எனவும்,முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் எனவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. சமீப காலமாக ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகளில் தனி மனித தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications