துபாயில் போலிச் சான்றிதழ் வேண்டி லஞ்சம் கொடுத்த 3 இந்தியர்களுக்கு சிறை
துபாய்: ஹைபிடைட்டிஸ்-பி இல்லையென கூறி, ஆரோக்கியச் சான்றிதழ் கேட்டு சுகாதார ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற 3 இந்தியர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது துபாய் நீதிமன்றம்.
துபாயில் நோய் பரவக் கூடிய இடங்களில் பணி புரிபவர்கள் ஆண்டுக் கொருமுறை தங்கள் ஆரோக்கியம் குறித்தான சான்றிதழ் சமர்ப்பிப்பது நடைமுறை வழக்கம். இந்நிலையில் துபாயில் உள்ள சிகை அலங்கார நிலையத்தில் பணி புரிந்து வந்த இந்தியர் ஒருவருக்கு கொடிய நோய் கிருமியான 'ஹெபிடைட்டிஸ்-பி' எனப்படும் கிருமியின் தாக்கம் ஏற்பட்டது.
எனவே, தனது நண்பருக்கு உள்ள 'ஹெபிடைட்டிஸ் - பி' நோய் தொற்றை மறைத்து அவர் ஆரோக்கியமாக உள்ளதாக சான்றிதழ் வழங்க வேண்டும் எனக் கேட்டு இந்தியர் ஒருவர் துபாய் சுகாதார ஆய்வாளருக்கு போன் செய்துள்ளார்.
சுகாதார ஆய்வாளர் அக்கோரிக்கையை மறுத்து விடவே, மறுநாள் அவரது அலுவலகத்திற்கு வந்த அந்த ஆசாமி, 'ஏற்கனவே உங்கள் அலுவலகத்தில் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு நலமாக உள்ளதாக சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. நீங்களும் எனது நண்பருக்கு அதுபோல் சான்றிதழ் அளிக்க வேண்டும். உங்களுக்கு ஆயிரத்து ஐநூறு திர்ஹம் பணம் தருகிறேன்' எனக் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சுகாதார அதிகாரி இது குறித்து தனது மேலதிகாரிக்கு தகவல் அளித்தார். அதனைத் தொடர்ந்து, லஞ்சம் தர முயன்றவர்களை கையும் களவுமாக பிடிக்க திட்டம் வகுத்த போலீசார், அதோடு சேர்த்து இதுவரை தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலமாக இருப்பது போல் சான்றிதழ் வழங்கியவர்களை பிடிக்கவும் முடிவு செய்தனர்.
அதன்படி, லஞ்சம் தந்து போலி சுகாதார சான்றிதழ் பெற முயன்ற 3 இந்தியர்கள் மீதும் துபாய் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், குற்றவாளிகள் என விசாரணையில் உறுதியான மூவருக்கும் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் 600 திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டது. தண்டனை காலம் முடிந்த பின்னர் மூவரையும் துபாயை விட்டு வெளியேற்றும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications