ஆப்கான் சிஐஏ அதிகாரி பெயரை தவறுதலாக அம்பலப்படுத்திய அமெரிக்கா: அச்சத்தில் அதிகாரி குடும்பம்
வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க உளவு அதிகாரியின் பெயரை தவறுதலாக அமெரிக்கா வெளியிட்டு அபாயத்தை இழுத்துக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தாலிபான்கள் பிடியில் இருந்து ஆப்கானிஸ்தான் மீட்கப்பட்டு மக்கள் விரும்பும் அரசு செயல்பட, நேட்டோ படைகள் உதவி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூர் அருகேயுள்ள பக்ராம் விமான தளத்துக்கு நேற்று திடீர் விசிட் அடித்தார்.

முன்னறிவிப்பு ஏதுமின்றி நடந்த இந்த விசிட்டின்போது ஒபாமாவுடன் அமெரிக்க ராணுவ அதிகாரிகளும் வந்திருந்தனர். அந்த ராணுவ அதிகாரிகள் யார், யார் என பெயருடன் பத்திரிகைகளுக்கு அமெரிக்கா தகவல் அளித்தது. ஆனால் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க உளவு அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் பெயரையும் தவறுதலாக அந்த பட்டியலில் சேர்த்துவிட்டது அமெரிக்கா. அந்த அதிகாரி 'ஸ்டேஷனின் தலைவர்' என்ற பதவியில் உள்ளதாக அமெரிக்க வெள்ளைமாளிகை மீடியா பிரிவு அதிகாரிகள் தெரியாமல் தகவல் வெளியிட்டுவிட்டனர்.
தவறை உணர்ந்த பிறகு அவரது பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் இ-மெயில் செய்யப்பட்டது. இந்த தகவலை வெளியிட்டுள்ள அமெரிக்க பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட், அதிகாரிகளின் தவறால் ஆப்கானிஸ்தானிலுள்ள உளவுத்துறை அதிகாரிக்கும், அவரது குடும்பத்துக்கும் ஆபத்து ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளது. எனவே சிஐஏ உடனடியாக அந்த அதிகாரியை ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேற அறிவுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து வெள்ளைமாளிகை அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவருவதாகவும் வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications