திடீரென செயலிழந்த பாராசூட்.. 20,000 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த சுற்றுலாப் பயணி பரிதாபப் பலி
கிளிமாஞ்சாரோ மலைப் பகுதியில் பாராசூட் செயலிழந்ததால் சுற்றுலாப் பயணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டோடோமா: கிளிமாஞ்சாரோ மலைப் பகுதியில் பாராசூட் திடீரென செயலிழந்ததால், கனடா நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் பரிதாபமாக 20 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாதளங்களில் ஒன்று கிளிமாஞ்சாரோ மலை. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 20,000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் மிக உயரமான இந்த மலை பாராகிளைடிங், வைல்ட் லைப் சபாரி என சாகசப் பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான இடம். இதனாலேயே இங்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் செல்வதுண்டு.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜஸ்டின் கைலோ என்ற 51 வயது சுற்றுலாப் பயணி ஒருவர் இந்த மலைக்கு சென்றிருந்தார். மலையின் சிகரத்தில் ஏறிய ஜஸ்டின், அங்கிருந்து பாராகிளைடிங் மூலம் கீழே இறங்க முடிவு செய்தார்.
ஆனால் எதிர்பாராத விதமாக மலையில் இருந்து குதித்த அவரது பாராசூட் வேலை செய்யவில்லை. இதனால், சுமார் 20,000 அடி உயரத்தில் இருந்து தரையில் விழுந்தார் ஜஸ்டின். இதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த செய்தியை தான்சானியா தேசிய பூங்காவின் அதிகாரிகள் உறுதி படுத்தியுள்ளனர். எப்படி அவரது பாராசூட் வேலை செய்யாமல் போனது என்பது குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து கிளிமாஞ்சாரோவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.