காதல் திருமணம் செய்த இளைஞருக்கு ரூ.17 லட்சம் அபராதம் !
காதல் திருமணம் செய்த இளைஞருக்கு பாகிஸ்தான் பழங்குடியினர் நீதிமன்றம் ரூ.17 லட்சம் அபராதம் விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கராச்சி: காதல் திருமணம் செய்த இளைஞருக்கு பாகிஸ்தான் பழங்குடியினர் நீதிமன்றம் ரூ.17 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்தத் தொகையை, தான் திருமணம் செய்த பெண்ணின் பெற்றோருக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு நஷ்ட ஈடாக செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது.
சிந்து மாகாணத்தின் கந்த்கோட்-காஷ்மோர் மாவட்டம் தங்வானி அருகேயுள்ளது பஜர் அபாத் என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர் தான் காதலித்தவரை சட்டப்படி திருமணம் செய்தார்.

8 மாதங்களுக்கு முன்பு இந்தத் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தை விரும்பாத அந்தப் பெண்ணின் பெற்றோர் பழங்குடியின நீதிமன்றம் என்று கூறப்படும் "ஜிர்கா'வில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஜிர்கா பழங்குடியின நீதிமன்றம், காதல் திருமணம் செய்த பெண்ணின் பெற்றோருக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு நஷ்ட ஈடாக பெண்ணின் கணவன் 17 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.
மேலும் பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்த குற்றத்திற்கு இருவரையும் 3 மாதம் கிராமத்தை விட்டு விலக்கி வைத்தனர். இந்த சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications