வடகொரிய அதிபரை சந்திக்க டிரம்ப் ஒப்புதல்
டிரம்பை நேரில் சந்திக்க வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்கவிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உன் உடன் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாக அவரைச் சந்தித்த தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளால், அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே பல மாதங்கள் நீடித்த தொடர்ச்சியான பரஸ்பர அச்சுறுத்தல்களுக்கு பிறகு இந்த சந்திப்பு நடக்கவிருப்பது முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய தென்கொரியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சங் உய்-யங், "வரும் மே மாதவாக்கில் டிரம்ப் வடகொரிய அதிபரை நேரில் சந்திப்பார்," என்று தெரிவித்தார்.
கடந்த வாரம் பியாங்யாங்கில் கிம் ஜாங்-உன் உடன் பேச்சுவார்த்தை நடத்திய தென்கொரிய குழுவில் அவரும் இடம்பெற்றிருந்தார்.
"வடகொரியா அதிபர் உடனான சந்திப்பு குறித்து நாங்கள் டிரம்ப் இடம் விவரித்தோம். கிம் அணு ஆயுத நீக்கம் செய்ய ஒப்புக்கொண்டார் என்பதையும் தெரிவித்தோம்," என்று சங் தெரிவித்தார்.
"இனிமேல் வடகொரியா அணு ஆயுத சோதனை எதிலும் ஈடுபடாது என்று எங்களிடம் கிம் உறுதியளித்தார்," என்று கூறிய சங் "நிரந்தர அணு ஆயுத நீக்கம் செய்வதற்காக வரும் மே மாதம் கிம் ஜாங்-உன் உடன் நேரடிச் சந்திப்பு நடத்தவுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்," என்று கூறினார்.
பிப்ரவரி மாதம் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா கலந்துகொண்டபின் இரு கொரிய நாடுகளுக்கு இடையேயான உறவு மேம்பட்டுள்ளது.
எனினும் வடகொரியாவின் நம்பகத்தன்மை குறித்தும் சிலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
டிரம்ப் டிவிட்டர் பதிவு
https://twitter.com/realDonaldTrump/status/971915531346436096
இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவிலும், "அணு ஆயுத நீக்கம் பற்றி தென்கொரியப் பிரதிநிதிகளுடன் கிம் பேசியுள்ளார். அது வெறும் நிறுத்திவைப்பு மட்டுமல்ல. இந்த காலகட்டத்தில் வடகொரியா ஏவுகணைச் சோதனைகளைக்கூட நடத்தாது. நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தம் எட்டப்படும் வரை தடைகள் நீடிக்கும். சந்திப்பு திட்டமிடப்படுகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
- ரஷ்ய உளவாளியை பாதித்த விஷம் குறித்து தீவிர விசாரணை
- இலங்கை: கலவரம் தொடர்பாக 81 பேர் கைது
- கட்சி அலுவலகத்தில் குடியேறிய முன்னாள் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார்
- போலீஸ்: மக்களின் எமனா? காவலனா?














Click it and Unblock the Notifications