வரி எனும் ஆக்டோபஸ் கரங்களை விரிக்கும் டிரம்ப்! இந்தியாவில் இந்த 5 துறைகள் கடுமையாக அடி வாங்கும்!
வாஷிங்டன்: இந்தியா மீது பதிலடி வரியை விதிக்க இருப்பதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வந்த நிலையில், இன்று இரவு வரி தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின்றன. இதனால் இந்தியாவில் 5 முக்கிய துறைகள் கடுமையாக அடிவாங்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா வரி விதிக்கிறது. பதிலுக்கு இந்திய பொருட்களுக்கும் அமெரிக்கா வரியை விதிக்கிறது. இரண்டு வரிகளும் ஒரே அளவில் கிடையாது. ஏனெனில் இரண்டும் பொருளாதாரத்தில் சமமான வளர்ச்சியை கொண்ட நாடுகள் கிடையாது. இதை புரிந்துக்கொள்ளாமல், ஒரே மாதிரியான வரியை டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

டிரம்ப்பின் வரியால் இந்தியாவில் பாதிப்பை சந்திக்கும் துறைகள்
1. மின்னணு சாதனங்கள் (Electronics)
2. ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் (Gems & Jewellery)
3. மருந்துகள் (Pharmaceuticals)
4. கார்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் (Automobiles & Auto Components)
5. ஆடைகள் (Textiles & Apparel)
டிரம்ப்பின் வரி காரணமாக இந்த 5 துறைகளும் கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். மின்னணு சாதனங்களை பொறுத்த அளவில், இந்தியா $11.1 பில்லியன் மதிப்புள்ள மின்னணு பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. அதாவது மொத்த மின்னணு ஏற்றுமதியில் 32% அமெரிக்காவுக்குதான் செல்கிறது. குறிப்பாக Apple iPhones போன்ற கைப்பேசிகள் இந்தியாவில் தயாராகி அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகின்றன. இப்படி இருக்கையில் டிரம்ப் வரி விதித்தால், அதன் காரணமாக இந்தியாவில் உற்பத்தியாகும் ஐபோன்களின் விலை அமெரிக்காவில் அதிகமாக இருக்கும்.
அமெரிக்கர்கள் இந்திய தயாரிப்பு ஐபோன்களை தவிர்த்துவிட்டு, சீன தயாரிப்பு, ஐரோப்பிய தயாரிப்பு போன்களை வாங்க தொடங்குவார்கள்.
ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள்
இந்தியாவின் மொத்த நகை ஏற்றுமதி $33 பில்லியன். இதில் $9.9 பில்லியன் அமெரிக்காவுக்குதான் செல்கிறது. அதாவது 30% நகைகளை அமெரிக்கர்கள் வாங்குகிறார்கள். டிரம்ப் விதிக்கும் புதிய வரி காரணமாக அமெரிக்க மக்கள் இந்திய தயாரிப்பு நகைகளை தவிர்த்துவிட்டு சிங்கப்பூர், UAE, ஓமன் போன்ற நாடுகளிலிருந்து தயாரிக்கப்படும் நகைகளை அமெரிக்கர்கள் வாங்குவார்கள். எனவே இந்தியாவில் நகை தயாரிப்பு துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் கொத்து கொத்தாக வேலையை இழப்பார்கள்.
மருந்துகள்
அமெரிக்க வரியால் பாதிக்கப்படும் மற்றொரு துறை இது. அமெரிக்காவில் இறக்குமதியாகும் மருந்துகளில் 47% இந்தியாவுடையதுதான். விலை குறைவு, தரமும் ஓரளவுக்கு ஓகேவாக இருக்கிறது என்பதால் இந்திய தயாரிப்பு மருந்துகளுக்கு அமெரிக்காவில் நல்ல கிராக்கி இருக்கிறது. டிரம்ப் விதிக்கும் வரியால் இந்த மருந்துகளின் விலையும் உயர தொடங்கும். ஜப்பானை சேர்ந்த ஆய்வு நிறுவனமான Nomura, இந்த வரியால் இந்திய மருந்து துறை எந்த அளவுக்கு பாதிக்கப்படும்? என்பது பற்றி ஆய்வு நடத்தியிருந்தது.
அதில், அமெரிக்கா 10% வரி விதித்தால் இந்திய மருந்து துறை ஓரளவுக்கு சமாளித்துவிடும். இதுவே, 10%க்கும் அதிகமாக இருந்தால் இந்த துறையில் கடுமையான சரிவு ஏற்படும் என தெரிவித்திருக்கிறது.
கார்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள்
கார் உதிரி பாகங்கள் தயாரிப்பு சந்தையில் இந்தியாவின் பங்கு குறைவுதான். அமெரிக்க ஆட்டோ மொபைல் உதிரிபாகங்களின் தேவையில் இந்தியா 27% மட்டுமே பூர்த்தி செய்கிறது. இருப்பினும் இந்த துறையில் வரி விதிக்கப்பட்டால் துறை கடுமையாக அடிவாங்கும். ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை உற்பத்தி செய்யும் Tata Motors மற்றும் Sona Comstar, Samvardhana Motherson போன்றவை கடுமையாக அடிவாங்கும்.
ஆடைகள் உற்பத்தி துறை
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு 28% ஆடைகள் ஏற்றுமதியாகின்றன. ஆடை ஏற்றுமதியில் நமக்கு நிறைய போட்டியாளர்கள் இருக்கிறார்கள். வியட்நாம், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் அமெரிக்காவுக்கு ஆடைகள் ஏற்றுமதியாகின்றன. இந்த சூழலில் அமெரிக்கா நமக்கு வரி விதித்தால் இந்த துறையில் மிகப்பெரிய வர்த்தக இழப்பு ஏற்படும்.
இவையெல்லாம் தவிர, இந்திய பங்குச் சந்தையிலும் அமெரிக்காவின் வரி தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே முதலீட்டாளர்கள் உஷாராக இருக்கிறார்கள். அமெரிக்காவின் வரி சுமாராக இருந்தால் மருந்து (Pharma), தகவல் தொழில்நுட்பம் (IT) துறைகளின் பங்குகள் ஓரளவுக்கு உயரும். வரி கடுமையாக இருந்தால் Sensex, Nifty மேலும் சரிவடைந்து கடுமையான இழப்பு ஏற்படும். இவை அனைத்திற்கும் பதில் இன்று இரவு 11 மணிக்கு தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications