மெக்சிகோ போதைப்பொருள் 'கடத்தல் மன்னன்'.. இளம் மனைவி கைது.. மிரள வைக்கும் 'பின்னணி'
அமெரிக்கா: மெக்ஸிகன் போதைப்பொருள் கடத்தல் தாதாவான 'எல் சாபோ' கஸ்மனின் மனைவி திங்களன்று அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
மெக்சிகோவை சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாகுயின் எல்சாபோ கஸ்மன். ரூ. 6500 கோடிக்கு சொந்தக்காரரான இவர், மெக்சிகோவில் இருந்து அமெரிக்கா வழியாக கோகைன், ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தி வந்தார்.
கடந்த 2014-ம் ஆண்டில் எல்சாபோ கைது செய்யப்பட்டு, அல்டிபிலானே சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த போதும், 2015ம் ஆண்டு சிறையில் சுரங்கம் தோண்டி அதன் வழியாக எல்சாபோ தப்பித்தார்.
பின்னர் அவர் தங்கியிருந்த இடத்தை கண்டறிந்த போலீஸார், பல மணி நேர துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் மீண்டும் அவரை கைது செய்தனர். இந்த துப்பாக்கி சண்டையின் போது 5 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. பின்பு மீண்டும் அவர் சிறையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார். தற்போது எல்சாபோ சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் தான், எல் சாபோவின் மனைவி திங்களன்று அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். கணவரின் போதைப்பொருள் கடத்தல் சாம்ராஜ்ஜியத்தை தொடர்ந்து நடத்த உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் கைதாகியுள்ளார். எல் சாபோவின் இரு எஸ்கேப் முயற்சியிலும் எம்மா கொரோனெலுக்கும் தொடர்பு உள்ளது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்து ஹெராயின், கொகேய்ன், மரிஜுவானா மற்றும் methamphetamine போன்றவற்றை விநியோகிக்க திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டிருக்கும் எம்மா கொரோனெல் வாஷிங்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எம்மாவின் இந்த கைது அமெரிக்க காவல்துறையின் அதி முக்கிய வழக்காக கருதப்படுகிறது. மேலும் இந்த கைது நடவடிக்கை மூலம், இருதரப்பு பாதுகாப்பு உறவுகளில் விரிசல் தீவிரம் அடைவதாக அமெரிக்க அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
எம்மாவை கடந்த 2007 ஆம் ஆண்டில் அவரது டீன் ஏஜ் பருவத்தில் கஸ்மன் மணந்தார். இவர்களுக்கு இரட்டை (twins) பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.