இஸ்ரேலுக்கு எகிறும் பிரஷர்! ஒரே நேரத்தில் பாலஸ்தீனத்தை அங்கீகரித்த கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா!
ஜெருசலேம்: காசாவில் போர் சூழல் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அங்கு இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கிடையே போரை முடிவுக்குக் கொண்டு வர அழுத்தம் கொடுக்கும் வகையில், பாலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பதாகப் பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா நாடுகள் அறிவித்துள்ளன. இது சர்வதேச அளவில் முக்கியமான ஒரு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த 2023ல் அக்டோபர் மாதம் திடீரென இஸ்ரேலில் புகுந்த ஹமாஸ் படை ஒரு தாக்குதலை நடத்தியது. அப்பாவி மக்களைச் சுட்டுக் கொன்று, பலரை கடத்தியும் சென்றது. அப்போது தான் காசா மீது இஸ்ரேல் மிகப் பெரிய தாக்குதலை ஆரம்பித்தது. அதற்கு முன்பும் காசா மீது இஸ்ரேல் அழுத்தம் கொடுத்தாலும் அது முழு வீச்சில் போராக மாற இந்தத் தாக்குதலே காரணமாக அமைந்தது.

ஏற்கனவே ஹமாஸ் தலைவர் சின்வார் உட்பட பல முக்கிய ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதனால் காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் எனப் பலரும் வலியுறுத்துகிறார்கள். இருப்பினும், இதை இஸ்ரேல் ஏற்பதாக இல்லை. காசாவை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்தில் இருக்கிறார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. இதன் காரணமாகவே ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை மோதல் தொடரும் எனச் சொல்லித் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
சமீப காலங்களில் தாக்குதல் மிகத் தீவிரமானதாக மாறியிருக்கிறது. காசாவில் எல்லாப் பகுதிகளிலும் சுற்றிவளைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. இதனால் உயிர் பிழைத்தாலே போதும் என அஞ்சி, மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறார்கள். கையில் கிடைக்கும் பொருட்களை எடுத்துக் கொண்டு தங்கள் வாழ்விடங்களில் இருந்து காசா மக்கள் வெளியேறி வருகிறார்கள்.
இஸ்ரேலின் இந்தத் தாக்குதலைப் பல்வேறு உலக நாடுகளும் மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளன. இஸ்ரேல் உடனடியாகத் தாக்குதலை நிறுத்த வேண்டும் எனச் சொல்லி வலியுறுத்தி வருகிறது. இதற்காக இஸ்ரேலுக்குப் பல வழிகளில் அழுத்தம் கொடுத்தும் வருகிறார்கள். அதன் ஒரு நகர்வாகப் பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்கும் நடவடிக்கையிலும் உலக நாடுகள் இறங்கியுள்ளன.
காசா மீதான தாக்குதலை நிறுத்தவில்லை என்றால் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்போம் என ஏற்கனவே பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அறிவித்திருந்தன. இஸ்ரேல் மோதலை முடிவுக்குக் கொண்டு வராததால் அதன் ஒரு பகுதியாகவே இப்போது ஒரே நேரத்தில் பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன. இது சர்வதேச அளவில் முக்கியமான ஒரு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications