ஆப்பு வச்சுடுச்சே அமெரிக்கா..ஈரானை வட்டமிட்ட ஸ்டீல் அரக்கன்கள்! படபடவென பறந்த எண்ணெய் ரேட்! சிக்கல்?
டெஹ்ரான்: மேற்கு ஆசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல் வழிப்பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மட்டும் கச்சா எண்ணெய் விலை சுமார் 8 சதவீதம் வரை உயர்ந்து கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இரு நாடுகளும் தற்காலிகமாக போர்நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டிருந்தாலும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை வெற்றியடையவில்லை.

இந்த பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சுமார் 21 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை எந்த முடிவும் இல்லாமல் முடிந்தது. இதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் நீரிணையை மூடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்கூட்டியே எச்சரித்திருந்தார்.
ஹார்முஸ் நீரிணை
அந்த எச்சரிக்கையை தொடர்ந்து, குறிப்பிட்ட நேரத்தில் அமெரிக்க போர்க்கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையின் இருபுறங்களிலும் நிலைநிறுத்தப்பட்டன. இதனால் ஈரான் துறைமுகங்களில் இருந்து வரும் கப்பல்கள் அந்தப் பகுதியில் நுழைய முடியாத நிலை உருவாகியுள்ளது. ஈரான் துறைமுகங்களில் இருந்து புறப்படும் அனைத்து கப்பல்களும் தடுத்து நிறுத்தப்படும் என அமெரிக்க ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற நாடுகளின் துறைமுகங்களில் இருந்து வரும் கப்பல்களுக்கு தடை விதிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க கடற்படை
இதன் மூலம் ஈரான் தொடர்புடைய கப்பல்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்படும் என்பது தான் அமெரிக்காவின் நிலைப்பாடாக உள்ளது. இந்நிலையில், ஹார்மூஸ் நீரிணையைச் சுற்றி அமெரிக்க கடற்படை பல்வேறு போர்க் கப்பல்களை குவித்துள்ளது. குறிப்பாக ஆபிரகாம் லிங்கன், ஜெரால்டு ஆர் போர்டு மற்றும் ட்ரிபோலி உள்ளிட்ட பல போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு கடல் பகுதியில் முகாமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
எண்ணெய் கப்பல்கள்
இந்த நடவடிக்கையால் ஹார்முஸ் நீரிணையை கடக்க முடியாமல் ஆயிரக்கணக்கான கப்பல்கள் கடலில் சிக்கியுள்ளன. தகவல்களின் படி, சுமார் 3,200 சரக்கு மற்றும் எண்ணெய் கப்பல்கள் அந்தப் பகுதியில் காத்திருக்கின்றன. இந்த கப்பல்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாலுமிகள் மற்றும் பணியாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ரஸ் அல் கைமா துறைமுகம் அருகே ஒரு சரக்கு கப்பல் பல நாட்களாக நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக எண்ணெய் சந்தை
இதற்கிடையில், அமெரிக்கா மேற்கொண்ட இந்த நடவடிக்கை உலகளாவிய எண்ணெய் சந்தையில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ஒரு பேரல் கச்சா எண்ணெய் சுமார் 96 டாலர் அளவில் விற்பனையாகி வந்த நிலையில், ஹார்முஸ் நீரிணை மூடப்பட்ட பிறகு அது 105 டாலர் வரை உயர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த விலை உயர்வு தொடர்ந்து நீடித்தால், எதிர்காலத்தில் எண்ணெய் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
எண்ணெய் விலை
அமெரிக்கா இந்த தடையை முழுமையாக கடுமையாக அமல்படுத்தினால், ஒரு பேரல் எண்ணெய் விலை 140 முதல் 150 டாலர் வரை உயரக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் உலகளவில் தினமும் விநியோகிக்கப்படும் சுமார் 12 மில்லியன் பேரல் எண்ணெய் பாதிக்கப்படக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில், இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட செய்தியில், இந்திய கப்பல்களுக்கு எந்த சுங்க கட்டணமும் விதிக்கப்படாது என்று ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் இறக்குமதி
இந்தியா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான உறவு தொடர்ந்தும் வலுவாக உள்ளதாகவும், இந்திய கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடக்க அனுமதி வழங்கப்படும் என்றும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலைமை தொடர்ந்தால், உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக இந்தியா போன்ற எண்ணெய் இறக்குமதி நாடுகளுக்கு இந்த நிலைமை நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். கச்சா எண்ணெய் விலை உயர்வு தொடர்ந்து நீடித்தால், அதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications