ஈரான் வசமாக சிக்கிக்கொண்டது..! திக்கு திசை தெரியமால் நிற்கும் டிரம்ப் - காமெனி!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை தற்போது மிகவும் இக்கட்டான கட்டத்தை எட்டியுள்ளது. இரு நாடுகளும் நேரடி போருக்கு செல்லாமல், ஒருவரை ஒருவர் பொறுமையை சோதித்து வரும் "போரும் இல்லை, அமைதியும் இல்லை" (No War, No Peace) என்ற நிலையில் உள்ளன. இந்த சூழல் நீண்டகாலம் நீடித்தால், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என உலக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் அடுத்தடுத்து சிக்கலில் வைத்து, யார் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியும் என சோதனை செய்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் நடத்த திட்டமிட்டிருந்த பேச்சுவார்த்தைகளை ரத்து செய்துள்ளார். தனது தூதர்கள் பாகிஸ்தான் செல்லும் பயணத்தையும் ரத்து செய்தார். இதன் மூலம் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை கடுமையாக்கியுள்ளது. இதேபோல் எந்த காரணத்திற்காகவும் ஹார்முஸ் வழித்தடத்தில் இருக்கும் அமெரிக்க கடற்படையை நீக்க முடியாது என அறிவித்துள்ளது.

ஈரான் தரப்போ, அமெரிக்கா தனது கடற்படைத் தடையை (Naval Blockade) திரும்பப் பெறாவிட்டால் பேச்சுவார்த்தைக்கு வர மாட்டோம் என்று தெளிவாக அறிவித்துள்ளது. இந்தத் தடை ஈரானின் வர்த்தகத்தையும் பொருளாதாரத்தையும் பெரிதும் பாதித்துள்ளது. இந்த இரு தரப்பு நிலைப்பாடுகளும் உடனடி பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை முடக்கியுள்ளன.
இந்த நிலையில் ஈரான் இன்று முன்வைத்துள்ள புதிய திட்டத்தில் அணு ஆயுதங்கள், அணு சக்தி, யூரேனியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை பிந்தைய காலக்கட்டத்திற்கு தள்ளி வைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக ஹார்முஸ் நீரிணை திறக்க முடியும், போர் நிறுத்தம் போன்ற முக்கிய விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்க முடியும் என ஈரான் பாகிஸ்தானிடம் தெரிவித்துள்ளது.
ஈரான் பொருளாதாரம் கடும் நெருக்கடியில்
இந்த "போரும் இல்லை, அமைதியும் இல்லை" நிலைப்பாடு போர் நேரடியாக இல்லாவிட்டாலும், பொருளாதாரப் போர் தீவிரமடைந்துள்ளது. ஈரான் ஏற்கெனவே அமெரிக்க சர்வதேசத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் No War, No Peace நிலை தொடர்ந்தால், ஈரானில் பணவீக்கம் 70 சதவீதம் வரை உயரும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மோசமான சூழல் ஏற்பட்டால் இது 120 சதவீதத்தைத் தாண்டும் அபாயம் உள்ளது. இதனால் ஈரான் மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் கடினமடையும்.
ரஷ்யாவின் தலையீடு
இந்தப் பதற்றம் இனி இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனையாக மட்டும் இல்லை. உலக அரங்கில் பெரிய நாடுகள் தலையிடத் தொடங்கியுள்ளன. அமெரிக்கா - ஈரான் மத்தியிலான பேச்சுவார்த்தை முடங்கியிருக்கும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியை இன்று நேரடியாக சந்தித்தார்.
இந்த சந்திப்பில் ஈரான் இந்தக் கடினமான காலகட்டத்தை சமாளிக்கும் என்று புடின் நம்பிக்கை தெரிவித்தார். ரஷ்யா பிராந்திய அமைதிக்கு ஆதரவாக செயல்படும் என்றும் கூறினார்.
பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு உள்ளதா?
டிரம்ப், ஈரான் தரப்பு விரும்பினால் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்று கூறியுள்ளார். "அவர்கள் நம்மிடம் நேரடியாக வரலாம் அல்லது நம்மை ஈரானுக்கு அழைக்கலாம்" என்று தெரிவித்தார். ஆனால் இரு தரப்பும் தங்கள் நிபந்தனைகளில் உறுதியாக இருப்பதால், இந்த அழைப்பு இப்போதைக்கு வெறும் சொற்களாகவே தெரிகிறது.
இந்த நிலை தொடர்ந்தால் உலகப் பொருளாதாரமும் பெரிய அளவில் பாதிக்கப்படும். கச்சா எண்ணெய் விலை உயர்வு, வர்த்தகப் பாதைகளில் தடை, உலகளாவிய பணவீக்கம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இந்தியா போன்ற எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் இதன் தாக்கத்தை நேரடியாக உணரும்.












Click it and Unblock the Notifications