அமெரிக்காவில் பிரம்மாண்டமாக நடந்த இராசேந்திரச் சோழன் நாடகம்! மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் அசத்தல்
மினசோட்டா: அமெரிக்காவில் உள்ள மினசோட்டா தமிழ்ச் சங்கம் சார்பில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி சங்கமம் பொங்கல் விழா நடத்தப்பட்டது. இதில் சிறப்பு நிகழ்ச்சியாக மாவீரன் இராசேந்திரச் சோழன் என்ற வரலாற்று நாடகம் அரங்கேற்றப்பட்ட நிலையில், அது பலரது கவனத்தையும் ஈர்ப்பதாக இருந்தது.
இந்தியர்கள் பலரும் படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்காக பல்வேறு நாடுகளுக்குச் செல்கிறார்கள். அமெரிக்காவில் இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள்.

அமெரிக்க வாழ் தமிழர்கள்
அமெரிக்காவில் வசித்தாலும் தமிழர்கள் பண்டிகைகளைத் தமிழ் சமூகத்தினர் தொடர்ந்து கொண்டாடி வருகிறார்கள். அதன்படி கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி அமெரிக்காவின் மினசோட்டாவில் உள்ள மினசோட்டா தமிழ்ச் சங்கம் நடத்திய சங்கமம் சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. அதில் சிறப்பு நிகழ்ச்சியாக மாவீரன் இராசேந்திரச் சோழன் என்ற வரலாற்று நாடகம் மேடையேற்றப்பட்டது. இதனை எழுத்தாளர் அ.வெண்ணிலாவின் கங்காபுரம் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு, பேராசிரியர் முனைவர் ராஜு எழுத்து, இயக்கத்தில் நவீன நாடகமாக வடிவமைத்திருந்தார்.
இந்நாடகத்தில், இராசேந்திரச் சோழனுக்கு குடும்பச் சூழலின் காரணமாகக் காலம் தாழ்த்தி இளவரசனாக முடிசூட்டப்பட்டதும், தந்தையின் பெருமையின் நிழலில் இருந்து அவர் விடுபட, தலைநகரமான தஞ்சையில் இருந்து புதிய தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றிய பின்னும், ஏற்பட்ட மனப் போராட்டத்தையும் மையப்படுத்தி அனைத்து கதாபாத்திரங்களும் வடிவமைக்கப்பட்டிருந்தது.

பல மாத பயிற்சி
சுமார் 4 மாதங்களாக வசன உச்சரிப்பு, ஏற்ற இறக்கம், காட்சியின் தன்மை என்று அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் இணைய வழியில், முனைவர் இராஜு இதற்கான பயிற்சியை நடத்தினார். மேலும் உடல் மொழியில், உணர்வுகளைக் கொண்டு வரும் விதமாக 1 மாத நேரடிப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்நாடகத்திற்கான உடை, அலங்காரப் பொருட்கள் அனைத்தும் தமிழகத்தில் இருந்து வாங்கப்பட்டது என்பது மற்றொரு சிறப்பாகும்.
இந்த நாடகத்திற்காக 8 அடி உயரமுடைய 6 தூண்களை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களே தயாரித்தனர். இதில் ஒலி, ஒளி அமைப்பு முக்கிய பங்காற்றும் என்பதால் அதிலும் நுட்பமான உத்திகளைப் பயன்படுத்தினர். 18 காட்சிகளுடன் மிகப் பிரமாண்டமாகப் பரதம், நாட்டுப்புற நடனம் என 5 பாடல்களுடனும் சுமார் 1 மணி 30 நிமிடத்திற்கு நடந்த இந்த நாடகத்தைப் பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர்.
இந்த நாடகத்தில் நடித்த, நடனமிட்ட அனைவரும் மினசோட்டா வாழ் தமிழ்ச் சங்க உறுப்பினர்களே ஆவர். மேலும், இந்த நாடகத்தை சிவானந்தம், சுந்தரமூர்த்தி, செந்தில்குமார், ப்ரியா, சச்சிதானந்தன், வேல்முருகன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

மினசோட்டா தமிழ்ச் சங்கம் சாதனை
உலகின் பெரும் பகுதியை கட்டி ஆண்டு, புலிக்கொடியைப் பறக்கவிட்டு, தமிழர்களின் புகழை உலகறியச் செய்த இராசேந்திரச் சோழனின் வரலாற்றை, நாடகமாகவோ, அல்லது திரைப்படமாகவோ இதுவரை யாவரும் சாத்தியப்படுத்தியதில்லை என்றும் நவீன நாடக வடிவில் முதல் முறையாக மினசோட்டா தமிழ்ச் சங்கம் மேடையேற்றியது தங்களுக்குப் பெருமை என்றும் மினசோட்டா தமிழ்ச் சங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
சுமார் 50 பேர் பங்கு கொண்ட பிரமாண்டமான இப்படி ஒரு வரலாற்று நாடகம் அமெரிக்காவில் அரங்கேற்றப்பட்டது பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications