ஈரான் மீது.. ஏகப்பட்ட அணுகுண்டுகளை வீச திட்டமிடும் அமெரிக்கா? பென்டகன் போடும் கொடூர பிளான்?
டெஹ்ரான்: ஈரானின் அணுசக்தி நிலையத்தை முற்றிலுமாக அழிக்க 1 டஜன் அணுகுண்டுகள் தேவைப்படும் என்று அமெரிக்க பென்டகன் வட்டாரங்கள் கூறுகின்றன. அதை பயன்படுத்துவதற்கும் அமெரிக்கா அஞ்சாது என்று பென்டகன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஈரான் நாட்டின் நடான்ஸ் நகரில் உள்ள முக்கிய யுரேனியம் செறிவூட்டல் தளத்தை இஸ்ரேல் தாக்கியது. இந்த தாக்குதல் அந்த தளத்தின் மேற்பரப்பை அழித்தது. மேலும், அங்குள்ள நிலத்தடி யுரேனியம் செறிவூட்டல் திறன்களுக்கும் சேதம் விளைவித்துள்ளதாக நம்பப்படுகிறது.

ஃபோர்டோவ் அணு உலை
அதே நேரத்தில், ஃபோர்டோவ் எனப்படும் மற்றொரு யுரேனியம் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்தத் தளம் இன்னும் முழுமையாக இயங்குகிறது. நடான்ஸை விட ஆழமான நிலத்தடியில் அமைந்துள்ள ஃபோர்டோவ் ஆலையைத் தாக்குவதற்குத் தேவையான ஆயுதங்கள் இஸ்ரேலிடம் இல்லை. இதை அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்குமா என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கு பதிலாக அமெரிக்காவே அங்கு அணு குண்டுகளை போடலாம் என்றும் கூறப்படுகிறது.
ஃபோர்டோவ் ஆலை முதலில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் ராணுவத் தளமாக கட்டப்பட்டது. இது கோம் நகருக்கு அருகில், மலையின் அடியில் அமைந்திருக்கிறது. ஈரான், செப்டம்பர் 21, 2009 அன்று சர்வதேச அணுசக்தி முகமைக்கு (IAEA), ஃபோர்டோவை அணுசக்தி தளமாக மாற்றியதாக கடிதம் எழுதியது.
சில நாட்களுக்குப் பிறகு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஃபோர்டோவ்வில் ரகசிய அணு எரிபொருள் செறிவூட்டல் ஆலை இருப்பதாக பகிரங்கமாக கூறின . 2009 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஈரானியர்கள் அங்கு 3,000 சென்ட்ரிஃபியூஜ்களை நிறுவ முயற்சிப்பதாக உளவுத் தகவல்கள் கிடைத்தன.
ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பாளர்கள், ஈரான் ஆயுத தர யுரேனியத்திற்கு அருகாமையில் இருப்பதாக கூறியது. அங்கே சுத்திகரிக்கப்பட்ட யுரேனியத் துகள்களைக் கண்டுபிடித்த ஒரே ஈரானிய தளம் ஃபோர்டோவ் மட்டுமே. இது 2023 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. ஃபோர்டோவ் தளம் மொத்தம் 2,976 சுழலும் சென்ட்ரிஃபியூஜ்களைக் கொண்டுள்ளது. இது நடான்ஸில் உள்ள சுமார் 50,000 சென்ட்ரிஃபியூஜ்களின் திறனில் ஒரு பகுதியாகும். இஸ்ரேல் வான்வழித் தாக்குதலைத் தொடங்கிய முதல் நாளிலேயே நடான்ஸ் தளத்தைத் தாக்கியது.
அதே சமயம் இஸ்ரேல் ஃபோர்டோவைத் தாக்கியதாகக் கூறியது. ஆனால், IAEA இயக்குநராகிய ரஃபேல் கிரோஸி, ஃபோர்டோவ் எரிபொருள் செறிவூட்டல் ஆலையில் அல்லது கட்டப்பட்டு வரும் கோண்டாப் கன நீர் உலை தளத்தில் எந்த சேதமும் இல்லை என்று கூறினார்.
அமெரிக்கா அணு ஆயுதம்
இப்படிப்பட்ட நிலையில்தான் ஈரானின் அணுசக்தி நிலையத்தை முற்றிலுமாக அழிக்க ஒரு டஜன் அணுகுண்டுகள் தேவைப்படும் என்று அமெரிக்க பென்டகன் வட்டாரங்கள் கூறுகின்றன. அதை பயன்படுத்துவதற்கும் அமெரிக்கா அஞ்சாது என்று பென்டகன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் அணு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த டிரம்ப் திட்டமிட்டு வருகிறாராம். ஈரான் அணு நிலையங்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் அமெரிக்காவும் இணைந்து கொள்வது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக பரிசீலித்து வருவதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்ப் திடீரென ஜி7 மாநாட்டில் இருந்து வெளியேறியது, வெள்ளை மாளிகையில் நடந்த உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் போன்ற நிகழ்வுகளுக்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் ஈடுபாடு அதிகரிக்கலாம் என்ற ஊகத்திற்கு, டிரம்ப் ஜி7 உச்சி மாநாட்டில் இருந்து பாதியிலேயே வெளியேறியது ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
டிரம்ப் - இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்கா
அமெரிக்க ஊடக அறிக்கைகளின்படி, இஸ்ரேல் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்களில் அமெரிக்காவும் பங்கேற்பது குறித்து டொனால்ட் டிரம்ப் ஆலோசித்து வருகிறார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு குழுவுடன் டிரம்ப் ஒரு மணி நேரம் 20 நிமிடம் ஆலோசனை நடத்தினார்.
மூத்த உளவுத்துறை அதிகாரி மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரி உட்பட இந்த விவகாரம் குறித்து நன்கு அறிந்த வட்டாரங்கள், ஈரான் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் பல நாட்களாக நடத்தி வரும் ராணுவ நடவடிக்கையில் டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவும் இணையக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.
ஈரானின் சுரங்கப்பாதை செறிவூட்டல் வசதிகளை அமெரிக்கா குண்டு வீசி அழிக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications