எனக்கு கேன்சர்.. மொட்டை போட்டு, பொய் பேசி பல லட்சம் பணம் பறித்த மிஸ் பென்சில்வேனியா!
பால்டிமோர்: தனக்கு புற்றுநோய் இருப்பதாக பொய்யான தகவலை பல நூறு பேரிடம் பணம் பறித்த மிஸ் பென்சில்வேனியா அழகி பிரான்டி லீ வீவர் கேட்ஸ் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
23 வயதான இவர் பலரிடமும் இதுபோல பொய் சொல்லி ஆயிரக்கணக்கான டாலர் பணத்தை மோசடியாக பெற்றுள்ளார்.
தனக்கு நெருக்கமான நண்பர்களிடமும், அவர்களது குடும்பத்தாரிடமும், அவர்களுக்குத் தெரிந்தவர்களிடமும் இவர் தனக்கு ரத்த புற்று நோய் இருப்பதாக பணம் பறித்துள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர்.
மிஸ் பென்சில்வேனியா
இவர் மிஸ் பென்சில்வேனியா அழகியாக முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். தற்போது இவரை சிறையில் அடைத்துள்ளனர். இவருக்கு வழங்கப்பட்ட மிஸ் பென்சில்வேனியா பட்டமும் பறிக்கப்பட்டு விட்டது.
பொய்யாகப் பேசி
இந்தப் பெண்ணின் செயல் அமெரிக்காவையே அதிர வைத்துள்ளதாம். புற்றுநோய் என்று கூறி பணம் பறித்த இவரது செயலை பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
குட்டு வெளிப்பட்டது
இவரிடம் நன்கொடையாக பணம் கொடுத்த சிலருக்கு இவர் மீது சந்தேகம் வரவே இவர் சிகிச்சை பெற்றதாக கூறப்பட்ட பால்டிமோர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனைக்குச் சென்று விசாரித்தபோதுதான் குட்டு வெளிப்பட்டது.
அலிபி உருவாக்கி மோசடி
தான் அந்த மருத்துவனைக்கு வந்து போனதற்கு "அலிபி"யையும் கேட்ஸ் உருவாக்கி வைத்திருந்தார். இவரும், இவரது தங்கையும் ஜான்ஸ் மருத்துவமனைக்குச் செல்வார்கள். அங்கு போனதும் தங்கை கீழே காத்திருப்பார். கேட்ஸ் மேலே போய் அங்குமிங்குமாக சில மணி நேரம் கழிப்பார். இதன் மூலம் தாங்கள் சிகிச்சைக்கு வந்து சென்றது போல பாவனை செய்து வந்துள்ளனர்.
மொட்டை வேறு
தான் டிராமா போடுவதை தத்ரூபமாக்க இவர் மொட்டை வேறு போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்காக பிரார்த்தனை செய்த பலரும் இப்போது இவரது நாடகத்தைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உள்ளனராம்.