நிலநடுக்கம்... தீவிரவாதிகள் நுழைவதைத் தடுக்க இந்தியா- நேபாள எல்லையில் பலத்த பாதுகாப்பு!
லக்னோ: நிலநடுக்கம் தொடர்ந்து ஏற்பட்டு வரும் நிலையில் இதனை பயன்படுத்தி தீவிரவாதிகள் நுழைந்துவிடாத வகையில் இந்தியா- நேபாள எல்லையில் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேபாளம் மற்றும் இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த சனிக்கிழமையன்று நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த பகுதிகளில் இருநாட்டு பாதுகாப்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

தீவிரவாதிகள் ஊடுருவல்?
இந்த இயற்கை பேரழிவை பயன்படுத்தி மாவோயிஸ்டுகள் மற்றும் தேச விரோத செயல்களில் ஈடுபடுவோர், நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ வாய்ப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. எனவே இந்தியா-நேபாள எல்லைப்பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினர் மிகுந்த உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

உஷார் நிலை
உத்தரபிரதேசத்தில் 550 கி.மீ. தூரத்துக்கு இந்தியா-நேபாள சர்வதேச எல்லைப்பகுதி வருகிறது. இந்த பகுதியில் பாதுகாப்பு பணிகளை கவனித்து வரும் மத்திய துணை ராணுவம் மற்றும் உத்தரபிரதேச போலீசார் மிகுந்த விழிப்புடன் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

படை குவிப்பு
இந்த எல்லைப்பகுதியில் கூடுதல் படையினரை குவித்துள்ளதுடன், பாதுகாப்பு தொடர்பான உளவுத்துறை தகவல்களை இருநாட்டு அதிகாரிகளும் பகிர்ந்து வருகின்றனர்.

உ.பி. மாநில போலீசார்
உத்தரபிரதேசத்தின் சிறப்பு அதிரடிப்படை மற்றும் தீவிரவாத எதிர்ப்பு படையினரும் பாதுகாப்பு பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக உத்தரபிரதேச போலீஸ் டி.ஜி.பி. ஏ.கே.ஜெயின் கூறினார்.












Click it and Unblock the Notifications