ஆஸ்திரேலியா டூ இந்தோனேஷியா சென்ற விமானத்தை கடத்த முயன்ற பயணி?
ஜகார்த்தா: ஆஸ்திரேலியாவிலிருந்து, இந்தோனேஷியாவின் ஃபாலி தீவுக்கு வந்துகொண்டிருந்த விமானத்தின் பைலட் அறைக்குள் பயணி ஒருவர் நுழைய முற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த நபர் பைலட்டை தாக்கிவிட்டு விமானத்தை கடத்த முயற்சி செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்லாத்தானய்யா போய்கிட்டு இருந்து..
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இருந்து இன்று காலை விர்ஜின் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் இந்தோனேஷியாவின் சுற்றுலா நகரமான ஃபாலி தீவுக்கு வந்துகொண்டிருந்தது. இந்தோனேஷிய வான் எல்லைக்குள் அந்த விமானம் வந்துகொண்டிருந்தபோது பயணிகள் இருக்கையில் இருந்த ஒரு நபர் திடீரென எழுந்து விமானியின் அறைக்குள் நுழைய முற்பட்டார்.
காப்பாத்துங்க
தனது அறைக்குள் ஒருவர் நுழைய முயலுவதை பார்த்து அச்சமடைந்த பைலட், விமானத்தை கடத்த முயற்சி நடப்பதாக ஃபாலி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக அவசரகதியில் விமானம் தரையிறக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படைவீரர்கள் வாகனங்களில் விமானத்தை சுற்றி வளைத்தனர்.
அமுக்கி பிடித்தனர்
விமானத்தின் வெளியே நின்றபடியே பைலட்டிடம் விமானத்திற்குள் உள்ள நிலைமையை கேட்டறிந்தனர். எத்தனைபேர் உள்ளனர், ஆயுதம் உள்ளதா என்பது போன்ற தகவல்களை அவர்கள் கேட்டனர். ஒருநபர் மீதுதான் சந்தேகம் உள்ளதாக பைலட் தெரிவித்தார். இதையடுத்து பாதுகாப்பு வீரர்கள் அதிரடியாக விமானத்திற்குள் நுழைந்து பைலட் அறைக்குள் நுழைய முற்பட்ட நபரை மடக்கி பிடித்தனர்.
போதையில் பாதை மாறியது
அவர் குடிபோதையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. போதை காரணமாக பைலட் அறைக்குள் நுழைய முற்பட்டாரா, அல்லது விமானத்தை கடத்தும் நோக்கத்தில் வந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சமீபத்தில்தான் மலேசிய விமானம் மாயமாகியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய விமானத்தில் நடந்த இந்த சலசலப்பு பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.