உத்தரவிட்டால் 2 வாரத்தில் உக்ரைன் தலைநகர் எங்கள் வசமாகிவிடும்: புதின் மிரட்டல்!!
மாஸ்கோ: தாம் உத்தரவிட்டால் 2 வாரத்துக்குள் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்றிவிடுவோம் என்று ரஷ்யா அதிபர் புதின் மிரட்டல் விடுத்துள்ளார்.
உக்ரைனின் கிரீமியா பிரிந்து ரஷ்யாவுடன் இணைந்தது முதலே அப்பிராந்தியத்தில் பதற்றம் நிலவி வருகிறது. அத்துடன் கிழக்கு உக்ரைனிலும் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உள்நாட்டுப் போரை நடத்தி வருகின்றனர்.
ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களுடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ரஷ்யா கோரி வருகிறது. ஆனால் உக்ரைனோ தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜோஸ் மேனுவல் பர்ரோசாவுடன் கடந்த வெள்ளியன்று தொலைபேசியில் ரஷ்யா அதிபர் புதின் பேசியிருக்கிறார். அப்போது, நான் இப்பொழுது உத்தரவிட்டாலும் 2 வார காலத்துக்குள் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்றிவிட முடியும் தெரியுமா? என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.
இதை ஜோஸ் மேனுவல் ஊடகங்களில் தெரிவிக்க இப்போது பரபரப்பாகிவிட்டது. அதே நேரத்தில் ரஷ்யா அதிபர் புதின் அப்படி சொல்லவே இல்லை என்றெல்லாம் அந்நாட்டு அரசு மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.