மலேசிய விமானம் கடத்தி, மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம்: அமெரிக்கா அச்சம்
கோலாலம்பூர்: மலேசிய விமானம் மாயமான பிறகு 4 மணிநேரம் விண்ணில் பறந்துள்ளதால் அதை யாராவது கடத்தி, ரகசியமான இடத்தில் மறைத்து வைத்திருக்கலாம் என்று அமெரிக்க விசாரணையாளர்கள் கருதுகிறார்கள்.
கடந்த சனிக்கிழமை மலேசியாவில் இருந்து 239 பேருடன் சீனாவுக்கு சென்ற விமானம் மாயமானது. அந்த விமானத்தில் பயணித்தவர்களின் கதி என்ன ஆனது என்பதை அறிய அவர்களின் குடும்பத்தார் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் விமானம் ரேடாரில் இருந்து மாயமான பிறகு 4 மணிநேரம் விண்ணில் பறந்ததாக அமெரிக்க விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.
விமானம் மாயமான பிறகு கூடுதல் மைல்கள் பயணித்துள்ளதால் அதை யாராவது கடத்தி, ரகசிய இடத்தில் வைத்திருக்கக்கூடும் என்று அமெரிக்க விசாரணையாளர்கள் கருதுகிறார்கள்.
விமானத்தையும், பயணிகளையும் ரகசியமான இடத்தில் வைத்து கடத்தியவர்கள் பிறகு ஏதாவது பயன் பெற நினைக்கலாம் என்ற கோணத்தில் அமெரிக்க தீவிரவாத தடுப்பு படைகள் விசாரணை நடத்தி வருகின்றன.