"வாட்ச், பேனா, மோதிரம்.." இம்ரான் கான் இப்போ கம்பி எண்ண காரணமே இதுதான்.. அட உண்மைதாங்க! அது எப்படி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமராக இருந்த இம்ரான் கானுக்கு இப்போது 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வாட்ச், பேனா, மோதிரம் தான் இந்த சிறைக்குக் காரணம் என்றால் நம்ப முடிகிறதா.. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். கிரிக்கெட் நட்சத்திரமான இம்ரான் கான் அரசியலிலும் நுழைந்து ஒரு கலக்கு கலக்கினார். கடந்த 2018 தேர்தலில் அதிக இடங்களைப் பெற்ற அவர் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் ஆனார்.

கடந்த 2018இல் பிரதமர் பதவிக்கு வந்த இம்ரான் கான், ஏப்ரல் 2022இல் பிரதமர் பதவியை இழந்தார். கூட்டணியில் இருந்த பல்வேறு கட்சிகளும் திடீரென அவருக்கு எதிராகத் திரும்பியதால் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து பிரதமர் பதவியை இழந்தார்.
இம்ரான் கான் கைது: அதன் பிறகு அதே கூட்டணிக் கட்சிகள் ஆதரவு அளிக்க எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ஷெரீப் பிரதமர் பதவிக்கு வந்தார். அதன் பிறகும் கூட இம்ரான் கான் அமைதியாக இருக்கவில்லை. நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறார். மேலும், பாகிஸ்தான் முழுக்க சென்று சூறாவளி பிரசாரத்திலும் இறங்கியுள்ளார்.
இதற்கிடையே இப்போது இம்ரான் கான் தோஷகானா வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதென்ன தோஷகானா வழக்கு... எதற்காக அவர் தண்டிக்கப்பட்டார் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
என்ன வழக்கு: பொதுவாகப் பிரதமர், குடியரசுத் தலைவர் பதவிகளில் இருப்போர் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது பரிசுகள் வழங்கப்படும். அவை அந்த தனி நபருக்கு வழங்கப்பட்ட பரிசு இல்லை. அந்த நாட்டிற்கான பரிசு. எனவே, அதை அவர்கள் அரசு கருவூல்திற்கு ஒப்படைத்துவிடுவார்கள். அப்படி பாகிஸ்தானில் இருக்கும் அரசுக் கருவூலத்தின் பெயர் தான் தோஷகானா. வெளிநாடுகளில் இருந்த பெற்ற விலை உயர்ந்த அரசு பரிசுகளை தோஷகானாவிடம் ஒப்படைக்காமல், விற்று லாபம் ஈட்டினார் என்பதே இம்ரான் கான் மீதான புகார்.
பிரதமராக இருந்த போது அவர் 38 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் அதாவது இந்திய மதிப்பில் 11 லட்சம் மதிப்பிலான கிராஃப் வாட்ச் உட்பட ஐந்து விலையுயர்ந்த வாட்ச் உள்ளிட்டவற்றை கருவூலத்தில் ஒப்படைக்கவில்லை. 38 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பிலான வாட்ச்சிற்கு அவர் வெறும் 2.5 லட்சம் மட்டுமே செலுத்தியுள்ளார்.
வாட்ச், பேனா: அதேபோல கடந்த 2018 செப். மாதம் வெறும் 2 கோடி பாகிஸ்தான் ரூபாயை மட்டுமே செலுத்திவிட்டு.. 8.5 கோடி பாகிஸ்தான் ரூபாய் மதிப்பிலான கிராஃப் வாட்ச். 56 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பிலான கஃப்லிங்க்கள் (cufflinks), 15 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் பேனா, 8 பாகிஸ்தான் ரூபாய் மதிப்பிலான மோதிரத்தைக் கருவூலத்திற்குத் தராமல் வைத்துக் கொண்டுள்ளார்.
அதேபோல 15 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பிலான ரோலக்ஸ் வாட்சிற்கும் வெறும் 2.94 லட்சம் பாகிஸ்தான் ரூபாயை மட்டுமே செலுத்தியுள்ளார். மற்றொரு 9 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பிலான ரோலக்ஸ் வாட்சிற்கு வெறும் 3.38 லட்சம் மட்டும் செலுத்தியுள்ளார். இப்படி வேறு பல விலையுயர்ந்த வாட்சுகளை அவர் சொற்ப தொகையைக் கொடுத்து தனக்கு வாங்கிக் கொண்டார்.
சிக்கிய நபர்: அதேபோல அவரது மனைவி புஷ்ரா பீபி, பல கோடி மதிப்பிலான நெக்லஸ், வளையல், மோதிரம், காதணிகளை கருவுலத்திற்கு கொடுக்காமல் அவரே வைத்துக் கொண்டார்.. இப்படி கருவூலத்திற்குக் கொடுக்காமல் அவரே வைத்துக் கொண்ட வாட்ச், பேனா, மோதிரம் ஆகியவை தான் இம்ரான் கானுக்கு இப்போது 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று தந்துள்ளது. இம்ரான் கானுக்கு முன்பு பிரதமராக இருந்தவர்களும் இதுபோல கிப்ட்களை வைத்துள்ளனர் என்ற போதிலும் இம்ரான்கான் தான் தண்டிக்கப்படுகிறார்.












Click it and Unblock the Notifications