"யப்பா.. இது உலக நடிப்புடா சாமி.." - பறவைகளை பிடிக்க திமிங்கலம் செய்யும் 'வேற லெவல்’ டெக்னிக்!
கார்பெர்ரா: பறவைகளை பிடித்து சாப்பிடுவதற்காக திமிங்கலம் பின்பற்றும் தந்திரம் காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. யாரிடம் இருந்து இந்த ஐடியாவை அது கற்றிருக்கும் என நெட்டிசன்கள் ஆச்சரியத்துடன் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
விலங்குகளின் உலகத்தை பார்ப்பதும், அதனை அறிந்துகொள்வதும் அலாதியான சுவாரசியத்தை தரக்கூடிய ஒன்றுதான். சில விலங்குகள், பறவைகள், மீன்கள் ஆகியவற்றின் புத்திசாலித்தனம் நம்மை வியப்பில் ஆழ்த்திவிடும்.
உதாரணத்துக்கு, நரியின் தந்திரமான அறிவை கண்டு வியக்காதவர்களே இருக்க முடியாது. தன்னை விட உருவத்தில் பெரிய அளவிலான மான்களைய ஒரு நரியால் நேருக்கு நேர் நின்று வீழ்த்தி அதனை உணவாக்கிக் கொள்ள முடியாது. அதனால், இரண்டு மூன்று நரிகள் சேர்ந்து ஒரு மானை துரத்தும். அப்போது அந்த மானை நேராக ஓட விடாமல், அதை வட்ட வடிவில் நரிகள் ஓடச் செய்யும். இதனால் ஓரளவுக்கு மேல் தலைசுற்றி கிறங்கி நிற்கும் அந்த மானை நரிகள் எளிதில் பிடித்து இரையாக்கும். இதுபோல பல விலங்குகளின் அறிவுக்கூர்மை நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். அப்படியொரு சம்பவத்தை தான் சுற்றுலா பயணிகள் தற்போது வீடியோ எடுத்துள்ளனர்.

திமிங்கலங்களின் 'அக்வாரியம்'
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஒரு மிகப்பெரிய 'அக்வாரியம்' (Aquarium) அமைந்துள்ளது. அங்கு பல வகையான மீன்களும், கடல்வாழ் உயிரினங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. திமிங்கலம், சுறா போன்ற ராட்சத மீன்கள் கூட இங்கு பராமரிக்கப்படுகின்றன. இந்த அக்வாரியத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்களும், சுற்றுலா பயணிகளும் வருகை தருவது வழக்கம். நாள் முழுவதும் சுற்றிப்பார்க்கும் அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த அக்வாரியம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட நீச்சல் குளங்கள்
இந்நிலையில், இந்த அக்வாரியத்துக்கு அருகே மிகப்பெரிய நீச்சல் குளங்கள் தனித்தனியாக இருக்கின்றன. இந்த நீச்சல் குளங்களில் டால்ஃபின், சுறா மீன்கள், திமிங்கலம் ஆகியவை வளர்க்கப்பட்டு வருகின்றன. நீச்சல் குளத்தில் அந்த பிரம்மாண்ட மீன்கள் நீந்தி செல்வதையும், துள்ளி குதிப்பதையும் மிக அருகே நின்றவாறு சுற்றுலா பயணிகள் பார்க்க முடியும். எனவே இந்த அக்வாரியத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த நீச்சல் குளங்களை சென்று பார்க்காமல் திரும்ப மாட்டார்கள்.

நாரைகளை பிடிக்க தந்திரம்..
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இங்கு ஒரு நீச்சல் குளத்தில் பராமரிக்கப்படும் 'கில்லர் வேல்' (Killer Whale) என அழைக்கப்படும் கொடூரமான திமிங்கலத்தை பார்க்க பார்வையாளர்கள் வந்திருந்தனர். அப்போது நீச்சல் குளத்துக்கு அருகே பெரிய பெரிய நாரைகள் வந்து தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தன. இதைப் பார்த்த திமிங்கலம், அவற்றை பிடிப்பதற்காக வேகமாக வந்தது. ஆனால் திமிங்கலம் வருவதை கண்ட நாரைகள் அங்கிருந்து பறந்து சற்று தூரம் செல்வதும், பின்னர் திமிங்கலம் அந்தப் பக்கமாக திரும்பியவுடன் தண்ணீர் குடிப்பதுமாக இருந்தன. இதனை அறிந்த திமிங்கலம் ஒரு சூப்பர் ஐடியா செய்தது.

இறந்த மீனை வைத்து ஐடியா
அதன்படி, நீச்சல் குளத்துக்குள் சென்று ஒரு சிறிய மீனை கடித்துக் கொன்று வாயில் வைத்தபடி வெளியே வந்தது. பின்னர் நீச்சல் குளத்தின் கரை அருகே வந்ததும் அந்த இறந்த மீனை கரையை ஒட்டிய நீரில் போட்டுவிட்டு சிறிது பின்வாங்கியது. இதை பார்த்த நாரைகள் மீனை சாப்பிடும் ஆசையில் நீச்சல் குளத்தில் இறங்கியதும், அதை பிடித்து திமிங்கலம் 'லபக்' செய்துவிடுகிறது. இவ்வாறு ஒவ்வொரு நாரையாக திமிங்கலம் பிடித்துச் சாப்பிடும் காட்சியை அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோ இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications