இம்ரான் கான் கைது.. காரணமான டிரஸ்ட்.. அது என்ன ‘அல்-காதிர்’ அறக்கட்டளை வழக்கு?
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கு விசாரணைக்காக இன்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றிருந்த போது கைது செய்யப்பட்டார். அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார். அது என்ன அல்-காதர் வழக்கு?
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக, ஊழல், பண மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வழக்கு ஒன்றில் இன்று விசாரணைக்கு ஆஜராவதற்காக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வந்த இம்ரான் கானை, பாகிஸ்தான் துணை ராணுவ ரேஞ்சர்கள் சுற்றிவளைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.

அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், நிலைமை இயல்பாக இருப்பதாகவும், விதியை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இஸ்லாமாபாத் காவல்துறை தெரிவித்துள்ளது.
அல்-காதிர் பல்கலைக்கழக அறக்கட்டளை வழக்கு என்பது, பஞ்சாப் மாகாணத்தின் பஹ்ரியா என்ற நகரில் உள்ள அல் காதிர் அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்ட நிலம் தொடர்புடையது. இந்த நிலத்தை தர உதவியதற்காக மாலிக் ரியாஸ் என்பவருக்கு 190 மில்லியன் பவுண்டுகளை இம்ரான் கான் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி மற்றும் அவர்களது நெருங்கிய உதவியாளர்களான ஜுல்பிகார் புகாரி மற்றும் பாபர் அவான் ஆகியோர் இணைந்து அல்-காதிர் திட்ட அறக்கட்டளையை உருவாக்கினர். ஜீலம் மாவட்டத்தில் அல் காதிர் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக இந்த அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.
இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது, 2019ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி அல்-காதர் பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், அந்த பல்கலைக்கழக அறக்கட்டளையின் தலைவராகவும் இருக்கிறார்.
இம்ரான் கானின் புஷ்ரா பீபி 2019 இல் ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனமான பஹ்ரியா டவுனுடன் நன்கொடைகளைப் பெற ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அவர்களது ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பஹ்ரியா டவுனில் நிலத்தை அல் காதிர் அறக்கட்டளை பெற்றது. நன்கொடையாகப் பெறப்பட்ட நிலத்தின் ஒரு பகுதி புஷ்ரா பீபியின் நெருங்கிய நண்பரான ஃபரா கோகி பெயருக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலத்தின் மதிப்பு குறைத்து மதிப்பிடப்பட்டு, பல்கலைக்கழகத்தின் பெயரில் இம்ரான் கான் தனது பங்கைப் பெற்றார். பிரதமராக இருந்த இம்ரான் கான் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த முறைகேடான செயலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
அல் காதிர் பல்கலைக்கழகத்திற்கு 180 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் நன்கொடையாக வந்த நிலையில், பல்கலைக்கழக தரவுகள் 8.52 மில்லியன் செலவிடப்பட்டதாக காட்டியதால் முறைகேடு குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான அல்-காதர் அறக்கட்டளை வழக்கில்தான் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications