"ஆசனவாய் வழியாக சுவாசிப்பது" என்றால் என்ன! அதை செய்வது எப்படி! பல உயிர்களை காப்பாற்றுமாம்!
டோக்கியோ: ஜப்பானைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆசனவாய் வழியாகச் சுவாசிக்கும் முறையைக் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்களிடையே நடத்தப்பட்ட முதற்கட்டச் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், அடுத்தகட்ட ஆய்வுக்கு ஆய்வாளர்கள் ரெடியாகிவிட்டனர். அதுவும் வெற்றிகரமாக இருந்தால் இது பல மனித உயிர்களைக் காப்பாற்றும் என அவர்கள் நம்புகிறார்கள்.
"ஆசனவாய் வழியாகச் சுவாசிப்பது.." இதைப் படிக்கும்போது உங்களுக்கு ஜாலியாக தோன்றினாலும் கூட இது ஒரு ஜோக் அல்லது மீம் கிடையாது.. இது ஒரு உண்மையான அறிவியல் கண்டுபிடிப்பு. மனிதர்கள் மலக்குடல் வழியாகச் சுவாசிக்கும் ஒரு முறையை ஜப்பான் மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

ஆசனவாய் வழியாகச் சுவாசம்
இதை அவர்கள் "பட் ப்ரீத்திங்" (Butt Breathing) என்று அழைக்கின்றனர். ஆனால், இதற்கு அறிவியல் ரீதியான பெயர் 'என்டரல் வென்டிலேஷன்' (Enteral Ventilation) ஆகும். இதில் மலக்குடல் வழியாக ஆக்சிஜன் செலுத்தப்படும். இது வரும் காலத்தில் மனித உயிர்களைக் காப்பாற்றும் என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
சமீபத்திய ஆய்வுகளில், சில கடல்வாழ் விலங்குகள் தங்கள் ஆசனவாய் வழியாகச் சுவாசிப்பது உறுதி செய்யப்பட்டது.. இந்த கண்டுபிடிப்புக்காகவே 2024ல் Ig நோபல் பரிசு வழங்கப்பட்டது. முதலில் மக்களைச் சிரிக்க வைத்து.. பிறகு சிந்திக்க வைக்கும் சாதனைகளுக்காக இந்த இக் நோபல் பரிசு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது..
மீன்கள்
நீரில் வாழும் சில வகை மீன்கள் தங்கள் மலக்குடலில் இருந்து ஆக்சிஜனை உறிஞ்சுவதை ஆய்வார்கள் கண்டுபிடித்தனர். லோச் (loach) எனப்படும் ஒரு வகை மீன், மேற்பரப்பில் இருந்து காற்றை விழுங்கி, குடல் வழியாக ஆக்சிஜனை உறிஞ்சுகிறது. இதன் மூலம் அவை குறைந்த ஆக்ஸிஜன் சூழ்நிலைகளிலும் உயிர் வாழ்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் என்டரல் வென்டிலேஷன் வயா அனஸ் (EVA) என்பது நுரையீரல் சரியாகச் செயல்படாத போது, கீழ் குடலின் உதவியுடன் சுவாசிப்பதாகும். லோச் மீன்கள் மட்டுமின்றி சில வகை ஆமைகள், பன்றிகளுக்கு இந்த திறன் இருக்கிறது.
ஆய்வு
வேடிக்கையாகத் தோன்றினாலும், இந்த ஆய்வு ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கலாம். இந்த ஆய்வை இப்போது ஆய்வாளர்கள் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். அதில் அதிக ஆக்ஸிஜன் செறிவூட்டப்பட்ட திரவத்தைப் பயன்படுத்தி மலக்குடல் வழியாக ஆக்ஸிஜனைச் செலுத்துகிறார்கள். விலங்குகள் மீதான வெற்றிகரமான சோதனைகளுக்குப் பிறகு, மனிதர்கள் மீது இதை சோதித்தனர்.
இந்த ஆய்வை மேற்கொண்ட ஓசாகா பல்கலைக்கழக ஆய்வாளரான தகனோரி டேக்பே இது தொடர்பாகக் கூறுகையில், "மனிதர்கள் மீது நாங்கள் செய்த முதல் ஆய்வு இது.! இந்த முறை பாதுகாப்பானது என்பதை இது காட்டுகிறது. இருப்பினும், எந்தளவுக்கு இவை பயன் தருகிறது என்பது அடுத்தகட்ட ஆய்வுகளில் தெரிய வரும்" என்றார்.
யாருக்கு உதவும்
அடுத்து, விஞ்ஞானிகள் அதிக செறிவூட்டப்பட்ட ஆக்ஸிஜன் கொண்ட பெர்ஃப்ளூரோகார்பன் திரவத்தைப் பயன்படுத்தவுள்ளனர். இந்த ஆக்சிஜன் திரவம், குடல் சுவர்கள் வழியாக ரத்த ஓட்டத்தை அடையும். இந்தச் சோதனை மூலம் நமது உடலில் எவ்வளவு வேகமாக ஆக்சிஜனை உறிஞ்சுகிறது என்பதைக் கண்டறிய முடியும். இந்தச் சோதனைகள் வெற்றிகரமாக இருந்தால் கடுமையான நுரையீரல் பிரச்சனை உள்ளவர்களின் உயிரைக் கூட இது காக்கும். நுரையீரல் பிரச்சனை இருப்போருக்கு இது உதவும்.!












Click it and Unblock the Notifications