"1300 பேர் பலி!" அப்படியே அதிர்ந்த துருக்கி! சரிந்த கட்டிடங்கள்! கொடூர நிலநடுக்கத்திற்கு என்ன காரணம்
துருக்கி நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 1000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
துருக்கி: துருக்கி நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலநடுக்கத்தில் பல நூறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.. அங்கு நிலநடுக்கத்தில் உயிரிழப்புகள் இந்தளவுக்கு அதிகரிக்க என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம்.
துருக்கி நாட்டில் இப்போது மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சமீப காலத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கமாக இது பார்க்கப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் மட்டும் சுமார் 2300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

துருக்கி நிலநடுக்கம்
காஸியான்டெப் நகருக்கு அருகில் 17.9 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த வலுவான நிலநடுக்கம் காரணமாக ஒட்டுமொத்த துருக்கி நாடே இப்போது போராடி வருகிறது, மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. துருக்கி மட்டுமின்றி சிரியா நாட்டிலும் இந்த நிலநடுக்கம் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் குறைந்தது 326 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 639 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றனர். மீட்புப் பணிகளில் 1000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

1000க்கும் மேற்பட்டோர் பலி
தற்போது வரை 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படும் என்று துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.. அங்குள்ள அதானா, மாலடியா, காஜியான்டெப், தியார்பகிர், உள்ளிட்ட நகரங்களின் பாதிப்புகள் மிக மிக மோசமாக உள்ளது. இதனால் துருக்கி நாட்டில் மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட துருக்கி நாட்டிற்கு அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடியும் அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று உறுதியளித்துள்ளார்.

முதல்முறை இல்லை
அதேநேரம் துருக்கி பகுதியில் இவ்வளவு மோசமான நிலநடுக்கம் ஏற்படுவது இது முதல்முறை இல்லை.. ஏற்கனவே கடந்த 1939ஆம் ஆண்டு வடகிழக்கு துருக்கியில் ரிக்டர் அளவுகோலில் 8 என்ற அளவுக்கு ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து 1942 முதல் 1967 வரை மேலும் ஐந்து மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1999இல் ரிக்டரில் 7.4க்கு பலமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். மேலும், பல லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.

33000 நிலநடுக்கம்
அதன் பிறகு பல சிறிய நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில், 2011 அக். 23ஆம் தேதி மற்றொரு மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது.. இதில் 100க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 2020ஆம் ஆண்டில் மட்டும் அங்கு மொத்தம் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் சுமார் 322 நிலநடுக்கங்கள் ரிக்டரில் 4க்கு மேல் இருந்துள்ளது. இப்படி துருக்கி நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட அது அமைந்திருக்கும் பகுதியே காரணம். துருக்கி நாட்டின் 98% பகுதி எளிதாக நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் அமைந்துள்ளது. அந்நாட்டின் முக்கிய நகரான இஸ்லான்புல் உள்ளிட்ட மூன்றில் ஒரு பகுதி மிகப் பெரிய ஆபத்தில் உள்ளது.

அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட என்ன காரணம்
நிலத்திற்கு அடியே இருக்கும் டெக்டோனிக் தட்டுகள் மோதிக் கொள்வதால் தான் நிலநடுக்கம் ஏற்படுகிறது. துருக்கியின் பெரும்பகுதி அனடோலியன் டெக்டோனிக் தட்டில் அமைந்துள்ளது.. இது யூரேசியன் மற்றும் ஆப்ரிக்கன் ஆகிய இரண்டு பெரிய தட்டுகளுக்கும், சிறிய அரேபியன் தட்டுக்கும் இடையில் அமைந்துள்ளது. இது துருக்கி அமைந்துள்ள பகுதியை இக்கட்டான நிலைக்குத் தள்ளுகிறது. அனடோலியன் மற்றும் யுரேசியன் தட்டு சந்திக்கும் பகுதி வடக்கு அனடோலியன் தட்டு என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் பூமிக்கு அடியே இருக்கும் அழுத்தம் என்பது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் துருக்கி நாட்டின் முக்கிய நகரான இஸ்தான்புல் தொடங்கி வடகிழக்கு துருக்கி முழுக்க ஆபத்தில் உள்ளது.

உயிரிழப்புகள் அதிகரிக்க என்ன காரணம்
இப்படி ஆபத்தான நிலையில் இருந்தாலும் கூட துருக்கி அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதில்லை.. துருக்கி நாட்டின் வளர்ந்த நகரங்களில் ஒன்றான இஸ்தான்புல் தொடங்கிப் பல நகரங்களில் உள்ள கட்டிடங்கள் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் இல்லை.. பல வீடுகள் தரமற்ற கட்டுமான பொருட்களால் கட்டப்படுகின்றன. இத்துடன் அங்குப் பஞ்சமும் பெரிய பிரச்சினையாக உள்ளது. இதனால் இதுபோல கட்டப்படும் தரமற்ற கட்டிடங்களிலும் பலர் இருக்கிறார்கள். இதுவும் உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications