சீனாவுக்கு முன்னரே இத்தாலியில் கொரோனா.. கிளம்பும் புதிய பூகம்பம்.. உலக சுகாதார மையம் முடிவு என்ன
ரோம்: சீனாவுக்கு முன்னரே இத்தாலியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்துக் கூடுதல் ஆய்வுகளை மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் - கடந்த 2 ஆண்டு உலகை ஆட்டிப்படைத்து வரும் ஒன்று. கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் ஏராளம். அதேபோல கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளைச் சரி செய்யவும் குறைந்தபட்சம் சில ஆண்டுகள் வரை ஆகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது தான் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு நிலைமை மெல்ல மாறி வருகிறது. கொரோனாவுக்கு முந்தைய நிலையை நோக்கி நாம் செல்ல தடுப்பூசிகள் மிக மிக முக்கியம்.

கொரோனா தோற்றம்
ஆனால், அதே நேரம் இது போன்ற பாதிப்புகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க கொரோனா வைரசின் தோற்றம் குறித்துத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியதும் முக்கியமானது. உலகின் அனைத்து நாடுகளையும் பாதித்துள்ள கொரோனா முதலில் எங்கு எப்படித் தோன்றியது என்பது இன்னும்கூட மர்மமாகவே உள்ளது. கடந்த சில மாதங்களாக யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் இருந்த இது, அமெரிக்கா உளவுத் துறையினர் அறிக்கையால் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இது குறித்து விசாரித்து புதிய அறிக்கையைச் சமர்ப்பிக்க அதிபர் பைடனும் உத்தரவிட்டுள்ளார்.

சீனாவில் கொரோனா
தற்போது வரை உறுதி செய்யப்பட்ட தகவல்களில், கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வூஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்டது. அங்கு 2019 டிசம்பர் இறுதியில் அதிகளவிலான மக்களுக்கு நிமோனியா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பிறகே உலக சுகாதார அமைப்பிற்குச் சீனா இது குறித்துத் தெரியப்படுத்தியது. அதேநேரம் சீனாவின் வூஹான் வைராலஜி மையத்தில் இருந்து கொரோனா திட்டமிட்டோ அல்லது விபத்தாகவோ பரவியிருக்கலாம் என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது.

இத்தாலியில் தோன்றியதா
அதேபோல ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில் மிலன் நகரின் அருகே கண்டறியப்பட்டது. ஆனாலும், கடந்த ஆண்டு வெளியான ஒரு ஆய்வில், இத்தாலி மக்களிடம், கடந்த 2019ஆம் ஆண்டிலேயே, கொரோனா ஆன்டிபாடிகள் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகே சீன ஆய்வாளர்கள், தங்கள் நாட்டில் கொரோனா பரவல் ஏற்படுவதற்கு முன்னரே, வெளிநாடுகளில் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அதன் பிறகு சீனாவில் அது கண்டறியப்பட்டிருக்கலாம் எனக் கூற தொடங்கினர்.

மீண்டும் ஆய்வு
இந்நிலையில், இத்தாலியில் நடத்தப்பட்ட ஆய்வுகளை மீண்டும் ஒரு முறை நடத்த உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. இத்தாலியில், முதலில் அந்த ஆய்வுகளை நடத்திய ஆராய்ச்சியாளர்களைத் தொடர்பு கொண்டு, மீண்டும் ஒரு முறை ரத்த மாதிரிகளில் ஆய்வுகளை நடத்துமாறு உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்துக் கூடுதல் தகவல்கள் வரும் வாரங்களில் வெளியிடப்படும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆன்டிபாடிகள் தான்
இத்தாலி ஆய்வாளர்கள் இது குறித்துக் கூறுகையில், "எங்கள் கண்டுபிடிப்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது என்றோ, 100% சரி என்றோ நாங்கள் கூறவில்லை. நாங்கள் நேரடியாக கொரோனா பாதிப்பைக் கண்டறியவில்லை. கொரோனா பாதிப்பிற்குப் பிறகு உருவாகும் ஆன்டிபாடிகளையே கண்டறிந்துள்ளோம். இது கொரோனாவை ஒத்து இருக்கும் வேறு வைரஸ்களால் கூட ஏற்பட்டிருக்கலாம்" என்றனர்.

புதிய கோட்பாடு
மேலும், கொரோனா குறித்து இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் தற்போது புதிய கருத்தை முன் வைத்துள்ளனர். அதாவது கொரோனா வைரஸ் சில மாதங்களாகவே சீனாவில் பரவியிருக்கலாம். ஆனால் அப்போது அது வீரியத்துடன் அதிக பாதிப்பை ஏற்படுத்தாமலும், வேகமாகப் பரவாமலும் இருந்திருக்கலாம். அதன் பிறகு, டிசம்பர் மாதம் உருமாற்றமடைந்து, தற்போது தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனாவாக அது உருமாறியிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தோற்றம்
மீண்டும் இதேபேலோன்ற வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கொரோனா பரவலின் தோற்றம் குறித்துக் கண்டறிய வேண்டியது மிக முக்கியமாகும். கொரோனா தீவிரமாக இருந்ததால், இத்தனை காலம் அதில் யாரும் பெரிதாகக் கவனம் செலுத்தவில்லை. தற்போது தடுப்பூசிகள் காரணமாகப் பல நாடுகளிலும் கொரோனா குறைந்து வருவதால், கொரோனா தோற்றம் பற்றிய ஆய்வுகள் மீண்டும் பரபரப்பாகியுள்ளது. இந்த ஆய்வின் இறுதியிலேயே கொரோனா முதலில் எங்குக் கண்டறியப்பட்டது என்பது தெரியவரும்..












Click it and Unblock the Notifications